அதலைக்காய் என்பது பாகற்காயின் நெருங்கிய மரபுவழிக் கொண்ட ஒரு கொடி இனமாகும். அதலைக்காய் தமிழ் நாட்டிலும், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திராவிலும் காணப்படுகிறது. பார்ப்பதற்கு பாகற்காய்களைப் போலவே இருக்கும். சுவையும் கசப்பான சுவை கொண்டது.
இக்கொடி பெரும்பாலும் தானாக வளர்வது. இதை முறையாகப் பயிரிட்டு வளர்க்காவிட்டாலும் மற்ற பயிர்கள் விளையும் வயல்களின் வரப்புகளில் இவை வளருகின்றன. இக்கொடிகள் பொதுவாக ஐப்பசியில் பூத்து, கார்த்திகை, மார்கழியில் காய்த்து, தைத்திருநாளுக்கு முன் அறுவடை செய்யப்படுகின்றன.
பல ஆண்டுகள் வாழும் இச்செடி ஒவ்வோர் ஆண்டும் வறட்சிக் காலத்தில் காய்ந்துவிட்டாலும் மண்ணுக்கடியிலிருக்கும் இதன் கிழங்கு உயிருடன் இருக்கும்.
ஒரே கொடியில் ஆண்பெண் பூக்கள் தனித்தனியே இருக்கும். மலர்கள் மெல்லிய மஞ்சள் நிறத்தில் இருக்கின்றன. ஒவ்வோர் ஆண் மலரிலும் இரண்டு மகரந்த உறுப்புகள் இருக்கின்றன. ஆனால், பெண் மலர்கள்தான் காய்களாகின்றன. காய்கள் கரும்பச்சை நிறமாக இருக்கும்.
உடல் நலத்துக்கு தேவையான பல மருத்துவத் திறன்களைக் கொண்டுள்ளது இக்காய். குறிப்பாக நீரிழிவுக்கும், குடற்புழுவுக்கும் நல்ல மருந்தாகிறது. சில வேளைகளில் கருக்கலைப்புக்கும் இவற்றைப் பயன்படுத்துகின்றனர்.
இவற்றின் இலைகளில் இருந்து பெறப்பட்ட மருந்து யானைக்கால் நோயை உண்டாக்கும் கியூலெக்சு வகை கொசுக்களை எதிர்க்கவல்லது என்றும் அறிந்துள்ளனர்.
அதலைக்காயில் அடங்கியிருக்கும் சத்துகள் நீர்ச்சத்து, நார்ச்சத்து, மாவுச்சத்து, புரதம், கால்சியம், பொட்டாசியம், சோடியம், இரும்பு, செப்பு, மங்கனீசு, துத்தநாகம், பாஸ்பரஸ், விட்டமின் சி,கரோட்டீன் போன்றவை அடங்கியிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.