'எந்த வயதிலும் வீராங்கனை ஆகலாம்' என்பதற்கு பதினாறு வயதாகும் க்ஷியா லோஹியா உதாரணமாகியிருக்கிறார். ஒன்பது வயதிலிருந்தே அதிவேக கார் ரேஸில் 'கோ-கார்ட்ஸ்' நிலை முதல் 210 கி.மீ,. வேகத்தில் காரை துப்பாக்கிச் தோட்டாவாகச் செலுத்தியவர் அவர்.
இந்தியாவின் எஃப்.4 பந்தய வீராங்கனைகளில் குறைந்த வயதில் நிற்கும் க்ஷியா, தனது 'எஃப். 1' கனவைத் தொட்டுத் தொடர பாலின, பொருளாதாரத் தடைகளைத் தாண்டி பயணிக்கும் அவர், 'என்னை ஒரு பெண் கார் பந்தய வீரர் என்று அழைக்காதீர்கள். நான் ஒரு கார் அதிவேகப் பந்தய வீரர். கார் பந்தயத்திலும் படிப்பிலும் சாதிப்பேன்' என்கிறார்.
அவர் கூறியது:
'சிறுவயதில் மகாராஷ்டிராவில் உள்ள பஞ்சாங்கனிக்கு குடும்பத்துடன் சென்றபோது, கார் ஓட்டுவதில் சாதனை புரிய வேண்டும் என்ற கனவு மலர்ந்தது. ஆறு வயது குழந்தைகளுக்கான போட்டியில் பொம்மை கார் ஓட்டிப் பார்த்தேன்.
பள்ளியில் படிக்கும்போது டென்னிஸ், கூடைப்பந்து, நீச்சல், இறகுப் பந்து என்று பல விளையாட்டுகளில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். மனம் என்னை அறியாமலேயே சாகச கார் பந்தயத்தைத் தேர்ந்தெடுத்தது. எனது கனவை நனவாக்க முழு மனதுடன் பெற்றோர் முன்வந்தனர்.
பெங்களூரில் இருக்கும் பயிற்சி நிலையத்தில் 2018-இல் சேர்ந்தேன். அப்போது எனக்கு வயது ஒன்பது . முறைப்படியே தொடங்கினேன். பயிற்சிக்காக புணேவிலிருந்து பெங்களூரு பயணம் செய்ய வேண்டி வந்தது. இதனால் உடல் சோர்வும், வலியும் ஏற்பட்டாலும் விரைவு கார் பந்தய பயிற்சிக்காக பொறுத்துக் கொண்டேன்.
2018-இல் நான் ரோடாக்ஸ் மேக்ஸ் இந்தியா கார்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் நான்காவது இடத்தைப் பிடித்தேன். தரவரிசையில் படிப்படியாக உயர்ந்தேன். இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப்களின் கூட்டமைப்பின் கார் பந்தயத்தில் சிறந்த பெண்கள் விருதைத் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக வென்றேன்.
2022-இல் இந்தியாவின் சிறார்களுக்கான மிக உயர்ந்த விருதான 'பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார்' எனக்கு வழங்கப்பட்டது. ஹிமாச்சலப் பிரதேசத்தை பூர்விகமாகக் கொண்ட நான் 'ஹைதராபாத் பிளாக்பேர்ட்ஸ்' அணிக்காக அதிவேக கார் பந்தயத்தில் பங்கேற்று' இந்தியாவின் முதல் பெண் ஃபார்முலா 4 ஓட்டுநராக' உருவெடுத்துள்ளேன். ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்த அதிவேக கார் பந்தய உலகில், திறமையும் மன உறுதியும், அர்ப்பணமும் இருந்தால் பாலின வேறுபாடுகளையும் தாண்டி சாதனை புரியலாம்.
அதிவேகமாக ஸ்போர்ட்ஸ் காரை எனது ஒன்பதாம் வயதிலேயே , மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காரை இயக்கினேன். 15-ஆம் வயதில், இந்திய 'எஃப். 4' சாம்பியன்ஷிப்பில் போட்டியில் மணிக்கு 210 கிமீ வேகத்தில் காரைப் பறக்க வைக்க முடிந்தது.
வீட்டுக் கல்வி மூலம் எனது கல்வியைத் தொடர்கிறேன். 11- ஆம் வகுப்பு அறிவியல் மாணவியான நான் கார் பந்தயத்திலும் படிப்பிலும் முன்னிலையில் இருக்க வேண்டும் என்று கவனமாக இருக்கிறேன். இந்தியாவின் விரல் விட்டு எண்ணக் கூடிய 'ஃபார்முலா ஒன்' ஓட்டுநர்களில் ஒருவராக வேண்டும் என்பதுதான் எனது லட்சியம். எனது சாதனைகளை 'சிறந்த மோட்டார் விளையாட்டுப் பெண்' எனும் விருதை இந்திய மோட்டார் விளையாட்டுக் கழகங்களின் கூட்டமைப்பு அங்கீகரித்தது'' என்கிறார் க்ஷியா லோஹியா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.