FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தினமணி கதிர்

உதிரம் கொடுப்போம்.. உயிரைக் காப்போம்...

'நாட்டில் நாளொன்றுக்கு சுமார் 1.5 கோடி யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது. ஆனால், குறைவாக ரத்தம் கிடைக்கிறது.

Updated On : 8 மார்ச் 2026, 4:16 am IST
பகிர்:

'நாட்டில் நாளொன்றுக்கு சுமார் 1.5 கோடி யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது. ஆனால், குறைவாக ரத்தம் கிடைக்கிறது. ரத்த தானம் குறித்த விழிப்புணர்வு நாட்டில் குறைவாக இருந்தாலும், தமிழ்நாட்டில் அதிகமாக உள்ளது. நாற்பது வயதாகும் நான் இதுவரை 95 முறை ரத்ததானம் செய்துள்ளேன். இதுவரை எனக்கு எந்தவித பிரச்னையும் ஏற்படவில்லை. ஆரோக்கியமாகவே இருக்கிறேன். எந்த நோயும் வந்ததில்லை.

இளைய தலைமுறையினர் போதை கலாசாரத்துக்கு அடிமையாகாமல் இதுபோன்ற சேவையில் ஈடுபடவேண்டும். 'உதிரம் கொடுப்போம்.. உயிரைக் காப்போம்' என்று ரத்த தானம் குறித்து விழிப்புணர்வை கல்வி நிலையங்களில் மேற்கொண்டு வருகிறேன்' என்கிறார் சமூக ஆர்வலர் ரா. சிவபாலன்.

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்பட்ட மார்த்தாண்டத்தை அடுத்த பாகோடு, மாவிளையைச் சேர்ந்த இவர் நாட்டுக்கோழிப் பண்ணையை நடத்தி வருவதுடன் வாடகை கார் தொழிலையும் செய்து வருகிறார்.

Advertisement

Advertisement

தனது ரத்த தான சேவை குறித்து சிவபாலன் கூறியதாவது:

'2002 -ஆம் ஆண்டில் ஒருநாள் நண்பர்களுடன் வீட்டிலிருந்து கடைக்குச் சென்றபோது, அருகிலுள்ள தனியார் மருத்துவமனையிலிருந்து ஓடி வந்த பெண் ஒருவர், 'எனது மகளை அவசரச் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளேன். 3 யூனிட் ரத்தம் கேட்கிறார்கள். என்ன ரத்தம் என்றுகூட தெரியவில்லை. கொஞ்சம் உதவி பண்ண முடியுமா தம்பி?' என அழுதுகொண்டே கேட்டார். அவர் தனது கணவர் கேரளத்தில் கட்டுமானத் தொழில் செய்து வருவதாகவும், அவர் அங்கிருந்து கிளம்பி வர நேரமாகும் என்றும் கூறினார்.

அப்போது எனக்கு வயது பதினெட்டு. நானும், நண்பர்களும் ரத்தம் கொடுப்பதாகத் தெரிவித்துவிட்டு மருத்துவமனைக்குச் சென்றோம். அங்கு அரிய வகையான 'ஓ பாசிட்டிவ்' ரத்தம் தேவை என்பது தெரியவந்தது. என்னுடன் வந்த இருவரின் ரத்தமும் 'ஓ பாசிட்டிவ்'. பரிசோதனையில் எனது ரத்தமும் 'ஓ பாசிட்டிவ்' பிரிவு. ரத்தம் கொடுத்துவிட்டு வந்தோம். அன்றிலிருந்து தொடங்கியது எனது சேவைப் பணி.

எனது 21 -ஆவது வயதில் ஒருநாள் இரவு சுமார் 2 மணிக்கு ஒருவர் எனது வீட்டுக் கதவைத் தட்டினார். கதவை திறந்து பார்த்தபோது, 'எனது மனைவி 9 மாத கர்ப்பிணி. விபத்தில் சிக்கிவிட்டார். மருத்துவமனையில் சேர்த்துள்ளோம். அதிக ரத்தம் தேவைப்படுகிறது. மருத்துவமனையில் உங்களது முகவரியைக் கொடுத்தார்கள்' என்றார் அவர். நான் உடனே சென்று, ரத்த தானம் அளித்தேன். அந்த கர்ப்பிணியின் பெயர் ஷகீரா பானு. திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர். அவர் குடும்பத்தினருடன் கன்னியாகுமரிக்கு வந்துவிட்டு திருவனந்தபுரத்துக்குச் சென்றபோது, விபத்து நேரிட்டுள்ளது. அதன் பின்னர், அந்தப் பெண்ணுக்கு நல்லபடியாக குழந்தை பிறந்தது. பெண்ணின் குடும்பத்தினர் என்னுடன் தற்போதும் பேசுவது உண்டு.

ஒருமுறை திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குலசேகரத்தைச் சேர்ந்த நபருக்கு இதய அறுவைச் சிகிச்சைக்காக 6 யூனிட் ரத்தம் தேவை என அழைத்தனர். நானும், நண்பர்களும் சேர்ந்து எனது காரில் திருவனந்தபுரத்துக்குச் சென்று ரத்தம் கொடுத்து வந்தோம். ரத்தம் கொடுக்கும் வரை சம்பந்தப்பட்டவரின் உறவினர்கள் எங்களுடன் இருந்தனர். ரத்தம் கொடுத்துவிட்டு வெளியே வந்தபோது, அவர்கள் அங்கு இல்லை. கைப்பேசியில் தொடர்பு கொண்டால் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

நான் இதுவரை யாரிடமும் பணம் வாங்கிவிட்டு ரத்தம் கொடுத்தது இல்லை. ரத்தம் பெறுபவர்களுக்கு சிறிய அளவிலான நன்றியாவது இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.

எந்த மருத்துவமனையாக இருந்தாலும், எனது சொந்த வாகனத்தில் சென்று ரத்தம் வழங்கிவிட்டு திரும்புவேன்.

இதுவரை 60 முறை பிரசவத்துக்காகவும், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக 25-க்கும் மேற்பட்ட முறையும் ரத்த தானம் செய்துள்ளேன். இவ்வாறாக 95 முறை ரத்த தானம் செய்துள்ளேன். அறுபது வயது வரை என்னால் முடிந்தளவு தொடர்ந்து ரத்த தான சேவை தொடரும். இதுதவிர, நண்பர்கள் வட்டத்தைச் சேர்ந்தவர்கள் மூலமும் இதுவரை 6 ஆயிரம் யூனிட் ரத்தம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளேன்.

திருமணத்துக்கு முன்புவரை எனது அம்மாவின் உறுதுணையும், திருமணத்துக்குப் பிறகு மனைவி உறுதுணையும் இருக்கிறது. இதுவரை நான் எந்தவித நோயாலும் பாதிக்கப்படவில்லை.

நண்பர்களுடன் சூழலியல் பாதுகாப்பிலும் கவனம் செலுத்தி வருகிறேன். இதுவரை 10,200 மரக்கன்றுகளை சாலையோரங்களிலும், நீர்நிலைகளின் கரையோரங்களிலும் நட்டு பாதுகாத்திருக்கிறோம். குளம், குட்டைகளைத் தூர்

வாரியுள்ளோம். மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகளையும் செய்துகொண்டிருக்கிறேன். இதுவரை சேவைகளுக்காக 45 விருதுகள் கிடைத்துள்ளது' என்கிறார் சிவபாலன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments