FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தினமணி கதிர்

எம். எஸ். விஸ்வநாதன் - நான் சந்தித்த பிரபலங்கள் - 54

எம். எஸ். விஸ்வநாதன் பற்றிய நினைவுகளைப் பகிர்கிறார் திரையுலகப் பிரமுகர் காரைக்குடி நாராயணன்...

Updated On : 19 ஏப்ரல் 2026, 4:03 am IST
பகிர்:

'எம்.எஸ்.வி.க்கு இணையான இசையமைப்பாளர் எவருமில்லை' என்று கண்ணதாசனும், 'எம். எஸ். வி. - கண்ணதாசன் காலம் பொற்காலம்' என்று சோவும் பாராட்டியுள்ளனர்.

ஜூபிடர் பிக்சர்ஸில் ஆலுவலக உதவியாளராக இருந்து ஆர்மோனியம் துடைத்து சுப்பையா நாயுடுவால் அடையாளம் காணப்பட்டார். 'தேவதாஸ்' படத்தின் இசையமைப்பாளர் சுப்பராமன் காலமானதால், அந்தப் படத்தின் புகழ் பெற்ற பாடல்களுக்கு இவர் இசையமைத்தார்.

ராமமூர்த்தியுடன் இணைந்து கலைவாணரின் 'பணம்' படத்தில் அறிமுகமானார். இதில் சிவாஜி நடித்தார். எம். ஜி. ஆரின் ஆரம்ப காலத்துப் படம் 'ஜெனோவா'வின் இசையமைப்பாளராகி, காற்றைவிட அதிகமாக முன்னேறி தெம்மாங்கு இசை முதல் மெக்ஸிகன் இசை வரை படங்களில் இசையமைத்து, இயக்குநர் ஸ்ரீதர் தலைமையில் மெல்லிசை மன்னர்கள் என்ற புகழ் பெற்ற கிரீடத்தை சிவாஜி சூட்டினார்.

Advertisement

Advertisement

1963-இல் மதுரை சித்திரைப் பொருள்காட்சியில் விஸ்வநாதன் ராமமூர்த்தியின் மெல்லிசைக் கச்சேரி நடந்தது. இவர்களைப் பார்த்தே ஆகவேண்டும் என்று நான் மதுரைக்குப் போய் இசைக் கச்சேரியைக் கேட்டேன். அப்போது 'பணத்தோட்டம்' படத்தில் பாடிய 'ஜவ்வாது மேடையிட்டு பாடவும்' என்று ஒரு சீட்டெழுதி அனுப்பினேன். அடுத்த பாடலாக அதைப் பாடினார்கள். திருப்பியும் வேறு சீட்டில் என் பெயரை மாற்றி எழுதி, 'ஜவ்வாது மேடையிட்டுப் பாடவும்' என்று அனுப்பினேன்.

அதைப் பார்த்த எம். எஸ். வி. மைக்கைப் பிடித்து, 'இங்கு எல்லோருக்கும் ஜவ்வாது கொடுத்தாகிவிட்டது. இதை எழுதி அனுப்பிய ரசிகருக்கு ஜவ்வாது தேவைப்பட்டால், கண்ணதாசனை அணுகவும்' என்றார். சபை அதிர்ந்தது.

சில மாதங்களில் நான் சென்னைக்கு வந்து இருக்க இடமில்லாமல், உண்ண உணவில்லாமல் அலைந்தபோது சாந்தோமில் அவர் வீட்டு வாசலில் அதிகாலையில் போய் நின்றேன். அவர் வெள்ளை உடை, நெற்றியில் சந்தனம், உடம்பில் ஜவ்வாது மணத்துடன் வந்து ஃபியட் காரில் ஏறுவார்.

என் பாடல்களின் கனவைச் சொல்லுவேன். 'அப்படியா... கண்டிப்பா...' என்று என் தோள்களைத் தட்டிக் கொடுத்து விட்டுப் போவார்.

ஆலளவு வளர்ந்த அந்த மிகப் பெரிய இசைக் கலைஞரிடம் நூலளவு கூட ஆணவம், அகந்தை இல்லாததைப் பார்த்து அதியப்படாதவர்கள் யாராவது உண்டா!

சில போராட்டங்களுக்குப் பிறகு நான் நாடகத்தில் பிரபலமானதும்1972-இல் 'என் சொந்தம்' முதல் படமாக இருந்தது. நான் வசனகர்த்தா என்ற முறையில் பாடலுக்கான சூழ்நிலையை என்னை

அறிமுகம் செய்த ஏ.சி. திருலோகசந்தர் சொல்லச் சொன்னார்.

பதற்றத்தில், யாரைத் தேடி அலைந்தேனோ, யார் எனக்கு முதன் முதலாக வாழ்த்துச் சொன்னாரோ அவர்களுக்கு நேரே சமமாக உட்கார்ந்து சொல்லத் தடுமாறினேன். உடனே திருலோகசந்தர் சொன்னார்.

உடனே ட்யூன்கள் போடப்பட்ட பத்து நிமிடங்களுக்கு இரண்டு பல்லவிகளை கவிஞர் எழுதினார்.

1. நல்லாத்தான் யோசிக்குறீங்க... நமக்கென்ன குறைஞ்சு போச்சு. 2. வாழ்ந்தால் உங்களைப் போல் வாழ வேண்டும்.

இந்த இரண்டு பல்லவிகளும் படத்துக்காக எழுதியது. ஆனால், நான் எனக்காக எழுதியது போல் உணர்ந்தேன். அடுத்தது என் வாழ்க்கையில் வசந்தத்தை உண்டாக்கிய 'தீர்க்க சுமங்கலி' எம்.எஸ். வி. இசையமைத்தார்.

எம்.எஸ்.வி. உடல்நிலை சரியில்லாத போது, அவர் மகள் வீட்டுக்குச் சென்று நானும் என் நண்பர் சுதாங்கனும் அவர் உடல் நலம் குறித்து விசாரித்தோம்.

ஒரு குழந்தை போல சினிமாவைப் பற்றிப் பேசினார். அவருடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்புவதாகச் சொன்னேன்.

'ஆசிரியரே ரொம்ப சாதாரண விஷயம் என்னுடன் போட்டோ எடுத்துக் கொள்வது. ஆனால், நான் சட்டைகூடப் போடவில்லை. நீங்கள் வந்திருப்பது தெரிந்து கைலியுடன் வந்தேன். உடல் நிலை சரியானதும் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்' என்றார்.

சிறு வயதிலேயே நாடக நடிகராய், பின் பாடகராய், இசையமைப்பாளராய் விஸ்வரூபம் எடுத்த மயைங்கத்து சுப்பிரமணியன் என்ற விஸ்வநாதன் கேரளத்தில் உள்ள பாலக்காட்டில் கண்ணதாசன் பிறந்த 1928, ஜூன் 24 அன்று பிறந்தார். தனக்குப் பின் வந்த இசையமைப்பாளர்களிடமும் எந்த பாரபட்சமும் காட்டாமல் படங்களில் பாடினார். இன்றும் என்றும் நம் காதுகளில் ஒலிக்கும் 'நீராடும் கடலுடுத்த' என்ற தமிழ்த் தாய்ப் பாடலைப் பாடினார்.

எந்த விருதுக்கும் சொந்தக்காரர் ஆகாத இவர் வசித்த சாந்தோமில் இருந்த டிமான்டி காலனி இன்று எம். எஸ். விஸ்வநாதன் சாலையாக மாறியுள்ளது. இவரது ஆர்மோனியம் 2015, ஜூலை 14 அன்று அமைதியாகி அஞ்சலி செலுத்தியது.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments