சாதனைப் பெண்கள்...
அரியாணாவைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு பயிலும் பதினான்கு வயது சிறுமி சானியா, காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை ஓடி வந்து சாதனை படைத்துள்ளார்.
அரியாணாவைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு பயிலும் பதினான்கு வயது சிறுமி சானியா, காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை ஓடி வந்து சாதனை படைத்துள்ளார்.
பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தியும், பெண்களால் சாதிக்க முடியும் என்பதை எடுத்துக்காட்டவும் இந்தப் பயணத்தை அவர் மேற்கொண்டார்.
கடந்த டிசம்பர் 13-இல் தனது ஓட்டத்தைத் தொடங்கிய அவர், மார்ச் 22-இல் தனது பயணத்தை முடித்தார். இவருக்கு உதவியாக பெற்றோர், உறவினர்கள் உடன் வந்தனர்.
Advertisement
தில்லி, உத்தர பிரதேசம், அரியாணா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரம், ஆந்திரம், கர்நாடகம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இந்தப் பயணம் நடைபெற்றது. 4 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை இவர் 98 நாள்கள் ஓடியே நிறைவு செய்தார்.
இந்தோனேஷியாவைக் கலக்கிக் கொண்டிருக்கும் ஒரு பெயர் 'சிப்டா'. இருபது வயது மாணவியான ரிஸ்கா படைத்த கதாபாத்திரம்தான் இது.
குழந்தைகளின் நலனை மையமாகக் கொண்டு, 'யுனிசெப்' நிறுவனம் காமிக்ஸ் புத்தகங்களுக்கான போட்டியை அண்மையில் நடத்தியது. இதில், 130 நாடுகளைச் சேர்ந்த 3,600 பேர் பங்கேற்றனர்.
இவர்களில் ரிஸ்காவின் காமிக்ஸ் பரிசை பெற்றது. அந்த காமிக்ஸின் நாயகன்தான் 'சிப்டா'. 'உலகில் உள்ள குழந்தைகள் பல்வேறு கொடுமைகளுக்கும், வன்முறைகளுக்கும் ஆளாவதை முடிவுக்குக் கொண்டு வரும் சூப்பர் ஹீரோவை படைக்க வேண்டும் என்று எண்ணினேன். அப்படி உருவானதுதான் சிப்டா'' என்கிறார் ரிஸ்காரைசா.
திருநெல்வேலி மாவட்டத்துக்கு உள்பட்ட வள்ளியூர் அருகேயுள்ள வடலிவினை கிராமத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் பொங்கல் விழாவையொட்டி நடத்தப்படும் பராம்பரிய விளையாட்டுப் போட்டிகளில் இடம்பெறும் இளவட்டக் கல் தூக்கும் போட்டி, உரல் தூக்கும் போட்டிகளில் பெண்களும் பங்கேற்று, சாகசம் புரிந்து அசத்துகின்றனர். ஆண்களுக்கு 60, 98, 114, 129 கிலோ எடையிலான இளவட்டக் கல் தூக்கும் போட்டிகளும், பெண்களுக்கு 55 கிலோ இளவட்டக் கல் தூக்கும் போட்டிகளும் நடத்தப்படுகின்றன.
இந்த ஆண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற ராஜகுமாரி, புஷ்பம் ஆகியோர் கூறுகையில், 'எங்கள் கிராமத்தில் பலஆண்டுகளாக இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன'' என்றனர்.