ரவி
கன்னியாகுமரியில் பிறந்து வளர்ந்தவர் ஆர்.டி.மீரா ராகவ். கலாஷேத்ரா பாணி பரதக் கலையில், தனது ஒன்பது வயது முதல் பயிற்சியில் ஈடுபட்டார். மிகவும் குறுகிய காலத்தில், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் 500-க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். சமஸ்கிருத ஸ்லோக விளக்கங்களுடனும் நடனத்தில் பரிணமிக்கும் மீரா, நடனம், நடனப் பயிற்சி அளித்தல், கலாஷேத்திரபாணி பரதநாட்டியம்,
அபிநயம், நட்டுவாங்கம் முதலியவற்றிலும் மேதமைத் தன்மை பெற்றிருப்பது சிறப்பு.
டிப்ளமோ இன் கிளாசிக்கல் டான்ஸ் முடித்து, தற்போது இளங்கலை பொறியியல் படித்து வரும் கல்லூரி மாணவியான இவர், தனது நாட்டிய அனுபவம் பற்றிக் கூறியது:
'கடந்த 2021-இல் எனது நாட்டிய அரங்கேற்றம் நடந்தது. அதைத் தொடர்ந்து, மலேசியாவில் நடைபெற்ற அகில உலக நடனப் போட்டியில் பங்கேற்று, 'இன்டர்நேஷனல் டான்சர்' டைட்டில் விருது வென்றேன். இதையடுத்து, ஆறு முறை உலக சாதனை நடன நிகழ்ச்சியில் பங்கேற்கும் அரிய வாய்ப்புக் கிடைத்தன.
இதனிடையே, சேலத்தில் நடைபெற்ற அகில இந்திய கல்ச்சுரல் பவுண்டேஷன் நினைவு இலச்சினையில் பெருமைக்குரிய இடம் பெற்றேன். பாரம்பரிய பரதக்கலை நடன
பங்களிப்பிற்காக ரோட்டரி கிளப், லயன்ஸ் கிளப் போன்ற பல்வேறு நிறுவனங்களின் பாராட்டுகள் கிடைத்தன. இந்த சாதனைகள் அளித்த உற்சாகம்தான், 500-க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளை இந்தியா மற்றும் உலகெங்கும் நடத்த உத்வேகமாக அமைந்தது.
பரதநாட்டியக் கலையைக் காட்சிப்படுத்துவதில், மேடை நிகழ்ச்சி நடத்துவதில் முழுமையாக ஈடுபட்டு பாரம்பரியமான பரதக் கலையிலுள்ள அழகையும், அதன் ஆழத்தையும் உலகத்தரம் வாய்ந்த அதன் செயல்திறனையும், வருங்காலத் தலைமுறையுடன் இணைந்து, நவீன பார்வையுடன் இந்த
உலகிற்குக் கொண்டு வரவேண்டும் என்பதே என் லட்சியம்!'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.