புக்கர் பரிசு பெற்ற இந்திய எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதி, 2025 செப்டம்பர் 2 -இல் வெளியான 'அன்னை மேரி என்னிடம் வருகிறார்' நினைவுத் தொகுப்பின் அட்டையில் இடம் பெற்ற படம், பலரது புருவங்களை உயர்த்தியிருக்கிறது.
உலக நாடுகளைத் தொடர்ந்து கேரளத்திலும் வெளியான சிலவாரங்களிலேயே பொதுநல வழக்கு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
'இளைஞர்களுக்கு, பெண்களுக்கு குறிப்பாக டீனேஜ் பெண்களுக்கு தவறான செய்தியை இந்தப் படம் தரக்கூடும். புகை பிடித்தலை மகிமைப்படுத்தி உற்சாகப்படுத்தவதாகவும் படம் அமைந்துள்ளது. சுகாதார எச்சரிக்கையான 'புகைபிடித்தல் உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும்' என்ற வாசகங்கள் இடம் பெறாமல் நூல் விற்பனைக்கு வந்துள்ளது!' என்று மனுதாரர் கேட்டுக் கொள்ள, கேரள உயர்நீதிமன்றம் மத்திய அரசின் பதிலைக் கோரியுள்ளது.
விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கும் படம் குறித்து அருந்ததி ராய் நூல் வெளியிடும் போது விளக்கம் தந்திருந்தார்.
அருந்ததி ராய் 1980-இல் புகை பிடித்ததை ரோமைச் சேர்ந்த நண்பரும், பத்திரிகையாளருமான கார்லோ புல்ட்ரினி படம் பிடித்தார். அப்போது அருந்ததிக்கு வயது 19. 'நூலை எழுதும் போது எனக்கு வயது 62. இப்போது 63. அப்படி இருக்கும் போது 19 வயதில் எடுத்த படத்தை இப்போது வெளியிடுவது பொருத்தமாக இருக்காது!' என்று அருந்ததி சொன்னாலும், நூல் வெளியீட்டாளர்கள் அந்தப் படத்தை வெளியிட்டே ஆகவேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்றனர்.
வேறு வழியில்லாமல் அருந்ததி, 'சரி, நான் இளம் பெண்ணாக இருந்தபோது எடுத்த படத்தை அட்டைப்படமாகப் பயன்படுத்த விரும்பினால், இப்போதைய வயதில் எடுத்த படத்தைப் பின் அட்டையில் பிரசுரிக்க வேண்டும்' என்ற நிபந்தனைக்கு நூல் வெளியீட்டாளர்கள் ஒத்துக்கொண்டார்கள்.
சாதாரணமாக பின் அட்டையில் மட்டுமே படைப்பாளரின் படத்துடன் குறிப்பும் அச்சிடப்பட்டிருக்கும். நூலின் முன் அட்டையில் 19 வயது அருந்ததி படமும், பின் அட்டையில் 63 வயதான ஒப்பனை இல்லாமல் எடுக்கப்பட்ட அருந்ததி படமும் அச்சிடப்பட்டு வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.