முகப்பு
சிறுவர்மணி

செயலின் வலிமை- சிறுகதை

அன்பே, உலகில் சிறந்த வலிமையான ஆயுதம். அதைக் கைக்கொண்டால் எல்லாரையும் வெற்றி கொள்ளலாம். வள்ளுவர் "அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்' என்று கூறியிருக்கிறார்.'' இவ்வாறு குமரன் தன் மனதிற்குள் கூறிக் கொண்டே

சிறுவர்மணி

செயலின் வலிமை- சிறுகதை

அன்பே, உலகில் சிறந்த வலிமையான ஆயுதம். அதைக் கைக்கொண்டால் எல்லாரையும் வெற்றி கொள்ளலாம். வள்ளுவர் "அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்' என்று கூறியிருக்கிறார்.'' இவ்வாறு குமரன் தன் மனதிற்குள் கூறிக் கொண்டே

Updated On : 27 டிசம்பர், 2023 at 2:19 PM
பகிர்:

அன்பே, உலகில் சிறந்த வலிமையான ஆயுதம். அதைக் கைக்கொண்டால் எல்லாரையும் வெற்றி கொள்ளலாம். வள்ளுவர் "அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்' என்று கூறியிருக்கிறார்.'' இவ்வாறு குமரன் தன் மனதிற்குள் கூறிக் கொண்டே பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தான்.

கிராமத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர் நடந்து வரும் போதுதான் அவன் நாள் தோறும் தான் படித்ததை எல்லாம் நினைவுகூர்ந்து சொல்லிப் பார்ப்பது. இன்று காலை அவன் படிக்கும் பள்ளியில் பேச்சுப் போட்டி. அவனும் கலந்து கொள்ள பெயர் கொடுத்திருந்தான். "அன்பின் வலிமை' என்று தலைப்பு கொடுத்து இருந்தார்கள்.

கடந்த மூன்று நாள்களாக நூலகம் சென்று குமரன் குறிப்புகள் எல்லாம் எடுத்து, தான் பேச வேண்டியதை தயார் செய்து இருந்தான். முதலில் அதை மனப்பாடம் செய்து விட்டுப் பின் ஏற்ற இறக்கங்களுடன் பேசிப் பார்ப்பது குமரனின் பழக்கம்.

தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக அவனே பேச்சுப் போட்டியில் முதல் பரிசு வாங்கி இருந்தான். இன்றோடு போட்டிகள் நடந்து முடிகின்றன. நாளை ஆண்டு விழாவில் முடிவுகளை அறிவித்து பரிசு கொடுப்பார்கள்.

இப்போது நகரத்தை அடுத்த புறநகர்ப் பகுதியில் அவன் சாலையின் ஓரமாகப் போய்க் கொண்டிருந்தான். பேருந்துகளும், இருசக்கர வாகனங்களும் விரைவாக அவனுக்குப் பின்னாலிருந்தும், முன்னாலிருந்தும் இறக்கை கட்டிக் கொண்டு பறப்பது போல் சென்றன.

குமரன் தான் படித்ததை நினைவுக்கூர்ந்து வருகையில் தன்னை மிக அவசரமாகத் தாண்டிப் போன ஒரு வயதான பெரியவரின் செய்கையால் அவன் கவனம் கலைந்தது. ""என்ன இவர் இவ்வளவு வேகமாகச் செல்கிறார்?'' என்று அவன் நினைக்கும் போது, அவனைத் தாண்டி வந்த ஓர் இருசக்கர வாகனம் அவர் மீது மோதியது. அது நிற்காமல் சென்றுவிட பெரியவர் கீழே விழுந்தார்.

""ஐயோ... அம்மா...'' என்று கத்திக்கொண்டே அவர் கீழே விழ, குமரன் ஓடிப் போய் அவரைப் பார்த்தான். உடனே அவரால் எழ முடியவில்லை. நெற்றியில் ஒரு கல் குத்தி இரத்தம் வந்தது. அவர் இரத்தத்தை நிறுத்தக் கையால் வெட்டுக் காயத்தை அழுத்தினார்.

குமரன் தன் பையில் இருந்த கைக் குட்டையால் இரத்தத்தை துடைத்தான். அதற்குள் பெரியவர் எழுந்து உட்கார்ந்தார். யாருமே இவர்களைச் சட்டை செய்யாமல் சென்று கொண்டிருந்தனர்.

பெரியவர் தன் துண்டைக் கிழித்து, ""தம்பி, இதால் ஒரு கட்டுக் கட்டிடு'' என்றார்.

குமரன் இறுகக் கட்டினான். காயம் சற்று பெரியதுதான் என்று அறிந்த அவன் உடனே அவருக்கு ஊசியும், காயத்துக்கு மருந்தும் தேவை என்று அறிந்தான். அவன் மனமோ தொடங்க இருக்கும் பேச்சுப் போட்டியிலேயே இருந்தது.

""தம்பி, கொஞ்சம் கூட வர்றீயா? இங்க ஒரு மருத்துவர் வீடு இருக்கு'' என்றார் பெரியவர்.

பள்ளி தொடங்கும் நேரம் வந்து விட்டது. ஆனாலும், அவரை விட்டுவிட்டுப் போக அவனுக்கு மனம் வரவில்லை.

குமரன் தோளில் கை வைத்துக் கொண்டு அவர் நொண்டி நொண்டி நடந்தார். காலிலும் ஏதோ உள் அடியாய்ப் பட்டிருக்கிறது என்று நினைத்த குமரன், பெரியவரின் காலைப் பார்த்தான். அது சற்று வீக்கம் கண்டிருந்தது.

மருத்துவர் ஊசி போட்டதோடு, காயத்துக்கு மருந்தும் வைத்துக் கட்டி மூன்று நாட்களுக்கு மாத்திரைகள் கொடுத்தார்.

""தம்பி, நீ பள்ளிக்கூடம் போகணும்ல'' என்றார் பெரியவர். பேச்சுப் போட்டி தொடங்கி இருக்கும் என்பது அவனுக்கு வருத்தமாக இருந்தது.

""இல்லைங்க தாத்தா, உங்கள வீட்ல கொண்டு போய் விடறேன்'' என்றான் குமரன்.

""வீட்டுக்கா...'' என்று இழுத்தார் பெரியவர்.

""ஏன் தாத்தா? வீட்டுக்குத்தானே போகணும்.''

""அங்கதான் காலைல சண்டைப் போட்டுட்டு வந்துட்டேனே.''

""சண்டையா? யாரு கூட'' என்று கேட்ட குமரனுக்கு, ""எல்லாம் என் புள்ள கூட தான்'' என்று பெரியவர் பதில் சொன்னார்.

குமரனின் தோளைப் பிடித்துக் கொண்டவரிடம், ""எல்லாம் சரியாயிடும். வாங்க வீட்டுக்குப் போகலாம்'' என்று அவன் கூறினான்.

பெரிய மனிதன் போல பேசியதைக் கேட்ட அவரும், குமரனுடன் புறப்பட்டார்.

""காலைல டி.வி.யில செய்தி வெச்சேன். புள்ள ஓடி வந்து உடனே அணைச்சுட்டான்'' என்றார் பெரியவர்.

""ஏன் அணைச்சாரு?'' என்று கேட்டான் குமரன்.

""அதுவா தம்பி, அவன் புள்ளைங்க படிக்கிற நேரமாம். நான் செய்தி வைச்சா அவங்க படிக்க மாட்டாங்களாம்.''

""சரிதானே, அவரு சொல்றது. டி.வி. ஓடும் போது எப்படிப் படிக்க முடியும்? நீங்க மதியம்தான் டி.வி. பார்க்கணும்'' என்றான் குமரன்.

பெரியவர் பேசாமல் நடந்தார். சிறிது தொலைவு சென்றவுடன் பெரியவர், ""எல்லார் மேலேயும் ஒரே வெறுப்பா இருக்கு தம்பி. ஒண்ணுமே புடிக்கல'' என்றார்.

""உங்க புள்ளைய கூடவா புடிக்கல'' என்று கேட்டான் குமரன்.

""ஆமாம்'' என்றார் பெரியவர்.

""உங்க புள்ள உங்களுக்கு என்ன குறை வெச்சிருக்காரு?'' என்று குமரன் கேட்க, பெரியவரால் பேச முடியவில்லை.

""தாத்தா, நீங்க பெரியவங்க. எல்லாம் தெரிஞ்சவங்க. உங்க புள்ள சொல்றதை நெனைச்சுப் பாருங்க. படிக்கிற போது சின்னப் பசங்களுக்கு உக்காந்து சொல்லிக் கொடுங்க. கோபத்தை விட்டுடுங்க. அன்பால எதையும் சாதிக்கலாம். நீங்க ஒரு தடவை அன்பைக் கொடுத்துப் பாருங்க. அது பத்து மடங்கா, உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும். வெறுப்பெல்லாம் ஓடியே போயிடும். அவங்களுக்கும் உங்க மேலே ஆசை இன்னும் அதிகமாயிடும். நான் இன்னைக்கு அன்பைப் பத்திதான் ஒரு போட்டியில பேசறதா இருந்தேன்'' என்று குமரன் கூறியதும், ""ஐயய்யோ... அது என்னால கெட்டுப் போச்சா?'' என்று பெரியவர் வருத்தமுடன் கேட்டார்.

""பரவாயில்ல தாத்தா! நீங்க நாளைல இருந்து மாறிடுங்க. எல்லாருகிட்டயும் அன்பா இருந்து பாருங்க. அதுவே எனக்குப் போதும்'' என்று குமரன் தொடர்ந்து கூறினான்.

பெரியவர் அவன் தலையை ஆதரவாகத் தடவினார். ""நல்லாப் பேசறயே, எத்தனாவது படிக்கற? எந்தப் பள்ளிக்கூடம்?'' என்று அவர் கேட்க குமரன் பதில் சொன்னா.

""இந்தத் தெருதான் தம்பி. கடைசி வீடு, நான் போயிடுவேன். நீ பள்ளிக்குப் போயிடு'' என்று பெரியவர் கூறி விட்டு வீட்டை நோக்கி நடந்தார்.

மதியம் பள்ளியில் குமரன் வந்து கலந்து கொள்ளாததையே எல்லாரும் பெரிதாகப் பேசினார்கள். தமிழாசிரியருக்கு இவன் மீது கோபம் போலிருக்கிறது. அவர் குமரனிடம் பேசவே இல்லை.

மறுநாள் ஆண்டுவிழா. தலைமை ஆசிரியர் அறிவிப்பு செய்து பரிசுகள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன. பேச்சுப் போட்டியின் முறை வந்தது.

அவர் ""பேச்சுப் போட்டியில் சிறப்புப் பரிசு பெறுபவர் குமரன்'' என்று அறிவித்தார். எல்லாருக்கும் ஒரே ஆச்சரியம்; கை தட்டவே மறந்தனர்.

""என்ன போட்டியில கலந்துக்காத குமரனுக்கு எப்படி பரிசு வந்ததுன்னு பார்க்கறீங்களா? நாமெல்லாம் அன்பைப் பற்றி நேற்றைக்கு இங்க பேச்சிலதான் காட்டினோம். ஆனா, அதே நேரத்துல குமரன் செயல்ல காட்டி இருக்கான். அடிபட்டு விழுந்த ஒரு பெரியவரை மருத்துவர்கிட்ட கொண்டு போய் காட்டி விட்டு, பின்னர் வீடு வரை கொண்டு போய் விட்டு வந்திருக்கிறான். அதுமட்டுமில்லாம, அவருகிட்ட அன்பைப் பத்தி அருமையாப் பேசி இருக்கான். யாருன்னே தெரியாத அவருகிட்ட அவன் காட்டின அன்புதான் அவனுக்கு சிறப்புப் பரிசு வாங்கித் தருகிறது. அவனால் பள்ளியும் பெருமை கொள்கிறது. அதோடு முக்கியமான ஒன்று, அந்தப் பெரியவர்தான் என் அப்பா!'' என்று கூறினார் தலைமையாசிரியர்.

குமரன் எழுந்து நின்றான். கூட்டத்தின் கைத்தட்டல் வானைப் பிளந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →