ஒவ்வோர் உயிரும் உயர்ந்ததுதான்!
பேயைப் பற்றித் தெரியாமல் "பேயே' என்று திட்டுவதேன்?
பேயைப் பற்றித் தெரியாமல்
"பேயே' என்று திட்டுவதேன்?
நாயின் நன்றி உணராமல்
"நாயே' என்று சுட்டுவதேன்?
கழுதை உழைப்பைப் பாராமல்
கத்தல் மட்டும் கேட்பதேன்?
எருமை பற்றி அறியாமல்
"எருமை' என்று கத்துவதேன்?
பன்றி செய்யும் தூய்மைபல
"பன்றி' என்ற இழிப்புரைஏன்?
ஆமை அரிய உயிரினமாம்
"ஆமை' என்று பழிப்பதுஏன்?
மரங்கள் செய்யும் பலநன்மை
"மரமே' என்று திட்டுவதேன்?
குரங்குகள் எல்லாம் காட்டுவளம்
"குரங்கே' என்ற அலறல் ஏன்?
ஒவ்வோர் உயிரும் உயர்ந்ததுதான் - இந்த
உண்மை அறிந்து வாழ்ந்திடுவோம்!
எவ்வித மேனும் இவற்றையெல்லாம்
இன்முகத் தோடு காத்திடுவோம்!