"கட்டா' சாம்பியன் விஜயலதா!
உடலுக்கும் உள்ளத்துக்கும் புத்துணர்ச்சி அளிக்கும் பல கலைகள் இருந்தாலும், கராத்தே என்ற தற்காப்புக் கலைக்கு
உடலுக்கும் உள்ளத்துக்கும் புத்துணர்ச்சி அளிக்கும் பல கலைகள் இருந்தாலும், கராத்தே என்ற தற்காப்புக் கலைக்கு எப்போதும் தனி மவுசுதான். வேகமும் விவேகமும்தான் கராத்தே கலையில் வெற்றிக்கு வழிவகுக்கும். இந்த தற்காப்புக் கலையை பெண்களும் ஆர்வமுடன் பழகி வருகிறார்கள். பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் கராத்தே பயிற்சி அளிக்கப்படுகிறது. தற்போது பெண்களும் தற்காப்புக் கலையை அவசியம் கற்க வேண்டும் என பலர் கூறி வருகிறார்கள். அந்த தற்காப்புக் கலையான கராத்தேவில் தேசிய அளவிலான போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றுள்ளார் விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஓய்.ஆர்.டி.வி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஜெ.விஜயலதா. அவரைச் சந்தித்தபோது...
கராத்தே பயிற்சியை எப்போதிருந்து பெற்று வருகிறீர்கள்?
நான் முதலாம் வகுப்பு வி.எஸ்.கே.டி. மெட்ரிக். பள்ளியில் சேர்ந்தபோது, கால்பந்து, டென்னிஸ், இறகுப்பந்து, கராத்தே போன்ற ஏதாவது ஒன்றில் சேர்ந்து பயிற்சி பெற வேண்டும் என ஆசிரியர்கள் கூறினார்கள். எனது பெற்றோர்கள் கராத்தே பயிற்சி பெற சேர்த்துவிட்டனர். முதலில் தயக்கமாக இருந்தது. பயிற்சிபெற பெற இதில் ஆர்வம் ஏற்பட்டது. மூன்றாம் வகுப்பு முதல் ஓய்.ஆர்.டி.வி. மெட்ரிக் பள்ளியில் சேர்ந்தேன். அப் பள்ளியில் கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டு வந்ததால், பயிற்சியைத் தொடந்து செய்து வருகிறேன்.
Advertisement
முதல் முதலில் எந்தப் போட்டியில் வெற்றி பெற்றீர்கள்?
9.3.2009 ஆம் தேதி விருதுநகர் மாவட்ட கராத்தே கழகம் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டியில் 7 வயது முதல் 9 வயது வரையிலான பெண்கள் பிரிவு போட்டியில் "கட்டா' பிரிவில் கலந்து கொண்டு முதலிடம் பெற்றேன்.பின்னர், பல போட்டிகளில் கலந்து கொண்டு முதலிடம், இரண்டாமிடம், மூன்றாமிடம் பெற்றுள்ளேன்.
தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பங்கு
கொள்ள எப்படி வாய்ப்பு கிடைத்தது?
தமிழ்நாடு புடாக்கான் கராத்தே கழகம் சார்பில் திருச்சியில் 2012, அக்டோபர் 21 ஆம் தேதி தேர்வுப் போட்டி நடைபெற்றது. அதில் வெற்றி பெற்று தேசிய போட்டிக்குத் தகுதி பெற்றேன்.
தேசிய அளவில் எந்தப் போட்டியில் தங்கப்
பதக்கம் வென்றீர்கள்?
தில்லி புடாக்கான் கராத்தே கழகம் சார்பில் புது தில்லியில் 14- ஆவது தேசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிகள் 2012 டிசம்பர் 15 மற்றும் 16-ம் தேதிகளில் நடைபெற்றது. இதில் 11 வயதுக்குட்பட்டவர்களுக்கான போட்டியில், பல மாநிலங்களிலிருந்து 12 பெண்கள் இந்தப் பிரிவில் போட்டியிட்டனர். ஹரியானாவிலிருந்து வந்த பெண்ணுக்கும் எனக்கும்தான் கடுமையான போட்டி இருந்தது. இறுதியில் பெண்கள் "கட்டா' பிரிவில் தங்கப்பதக்கம் பெற்றேன். மேலும், "குமுட்டி' பிரிவில் வெண்கலப் பதக்கம் பெற்றேன்.
உங்களது இந்த வெற்றிக்கு யார் வழிகாட்டுகிறார்கள்?
எனது பள்ளி முதல்வர் எல்.முரளி ஒவ்வொரு போட்டிக்குச் செல்லும்போதும் "வெற்றியுடன் வா' என வாழ்த்துவார். வெற்றிபெற்றுவந்த பின்னர் பாராட்டுவார். பள்ளிப் பயிற்சியாளர் முருகன் எப்படி மூவ்மெண்ட் அமைய வேண்டும் என்பது போன்ற நுணுக்கங்களைச் சொல்லித் தருவார். தனி பயிற்சியாளர் பாஸ்கரன் எங்கு போட்டி நடைபெறுகிறது எனக் கூறுவார். போட்டிக்கு அழைத்துச் சென்று உற்சாகப்படுத்துவார்.
பயிற்சி விவரங்களை கூறுங்களேன்?
பள்ளியில் ஒவ்வொரு வாரமும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சுமார் 45 நிமிடம் பயிற்சி அளிப்பாளர்கள். பள்ளி தவிர, வெளியிலும் நான் பயிற்சி பெற்று வருகிறேன். வெளியில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் மாலை 6.30 மணி முதல் 8மணி வரையிலும் பயிற்சி பெற்று வருகிறேன்.
வேறு விளையாட்டில் ஈடுபாடு உண்டா?
ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்டு பல பரிசுகள் பெற்றுள்ளேன். படிப்பில் வகுப்பில் முதல் பத்துபேரில் ஒருத்தியாக இருப்பேன்.
எதிர்காலத்தில் என்னவாக விருப்பம்?
டாக்டராக வேண்டும் என்பது எனது விருப்பமாக உள்ளது. நிச்சயம் டாக்டராகிவிடுவேன்!