முகப்பு
சிறுவர்மணி

ஏயர்ஸ் பாறை!

ஆஸ்திரேலியா கண்டத்தின் வடக்குப் பிரதேசத்தில் ஆலிஸ் பிரிங்ஸ் என்று ஓர் ஊர் உள்ளது.

Updated On : 15 நவம்பர், 2013 at 8:15 AM
பகிர்:

ஆஸ்திரேலியா கண்டத்தின் வடக்குப் பிரதேசத்தில் ஆலிஸ் பிரிங்ஸ் என்று ஓர் ஊர் உள்ளது. அங்கிருந்து 480 கிலோமீட்டர் தொலைவில் ஓர் அதிசயக் கற்பாறை இருக்கிறது. ஒரே பாறையாலான அந்தக் குன்று உலகிலேயே மிகப்பெரியது எனக் கருதப்படுகிறது. அங்கு வாழும் பழங்குடி மக்கள் அந்தக் கற்பாறையை உலுரு பாறை என்று அழைக்கின்றனர்.
 அந்த அதிசயப் பாறையை முதன்முதலாக வெளி உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் ஒரு வெள்ளைக்காரர். அவர் அதை 1873-இல் கண்டார். தெற்கு ஆஸ்திரேலியாவின் தலைமைச் செயலராக அப்போது இருந்த சர் ஹென்றி ஏயர்ஸ் என்பவரின் பெயரை அந்தக் கற்பாறைக்குச் சூட்டினார் அந்த வெள்ளைக்காரர். அப்பெயரில் ஏயர்ஸ் என்பதை மட்டும் எடுத்து ஏயர்ஸ் பாறை என்று பெயர் சூட்டிவிட்டார். அந்தப் பாறை தகிக்கும் மணற்பரப்பில் பரந்த பாலைவனத்தில் உள்ளது. அது 348 மீட்டர் உயரமும் 9 கிலோமீட்டர் சுற்றளவும் கொண்டது.
 இந்தப் பிரமாண்டமான கற்பாறை பல கிலோமீட்டர் தொலைவிலிருந்து பார்ப்போருக்கு சிவப்பு நிறக் கூடாரம் ஒன்று தன்னந்தனியே நிற்பது போன்ற பிரமையை உண்டு பண்ணும்!
 அப்பாறையின் மற்றொரு வியப்பான அம்சம் என்னவென்றால் அவ்வப்போது நிறம் மாறிக் காட்சி அளிப்பதாகும். அதன் இயற்கை நிறம் கருங்கற் பாறைக்கு உள்ள நீலம் கலந்த சாம்பல் நிறம்தான். ஆனால், வெயிலில் அது சிவப்பாக மாறி விடுகிறது. நண்பகலில் அது பழுப்பு நிறமாகத் தோன்றும். மாலைப்பொழுதில் அது நீலம் கலந்த சிவப்புப் பாறையாகக் காட்சியளிக்கும். சுற்றுலாப்பயணிகள் அந்தப் பகுதிக்குச் செல்கின்றபோது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய கற்காலத்திற்கே போய்விட்டது போன்ற பிரமையில் மூழ்கி விடுகிறார்கள்.
 உலக அதிசயங்களுள் ஒன்றாகக் கருதப்படும் ஏயர்ஸ் பாறைக்குச் சுற்றுலாப் பயணிகள் இன்றும் போய்க்கொண்டுதான் இருக்கின்றனர்.
 -ஆர். மகாதேவன், திருநெல்வேலி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.