முத்துக் கதை
நெல்லிக்காய் சாமியார் என்று ஒருவர் பூதமங்கலம் கிராமத்தில் இருந்தார்.
நெல்லி சாமியார்!
நெல்லிக்காய் சாமியார் என்று ஒருவர் பூதமங்கலம் கிராமத்தில் இருந்தார். காளி கோவில் நெல்லி மரத்தடியில் எப்போதும் இருப்பார். நெல்லிக்கனியை மந்திரித்துத் தருவார். விஷக்கடி, பயந்து போய் குழந்தைகள் நிறுத்தாமல் அழுவதற்கு விபூதி பூசுவார். சரியாகிவிடும். சிறு சிறு உபாதைகள், நோய்களுக்கு மருந்து சொல்வார். செலவின்றி குணமாகிவிடும். மக்கள் கூட்டம் எப்போதும் அவரிடம் இருக்கும். சோதிடமும் பார்ப்பார்.
அவருக்கு வயது நூறுக்கு மேல் இருக்கும். அவரிடம் ஒரு சீடன் இருந்தான். சரியான அவசரக் குடுக்கை. குரு எதைச் சொன்னாலும் பாதியைக் கேட்டுக்கொண்டு மீதியைக் காற்றில் விட்டு விடுவான்.
தன் அந்திமக் காலம் நெருங்கிவிட்டதை அறிந்த குரு, சிஷ்யனை அழைத்து சில ரகசிய மருந்து முறைகள், மந்திரங்களை உபதேசித்தார். வழக்கம்போல பாதியை மட்டும் காதில் வாங்கிக்கொண்டு மீதியைக் கவனியாமல் அலட்சியமாக இருந்து விட்டான். ஓர் ஓலைச் சுவடிக் கட்டை அவன் கையில் தந்துவிட்டு குரு பரமபதம் அடைந்தார். சுவடிக்கட்டைப் பத்திரப்படுத்தாததால் பாதியைக் கரையான் தின்றுவிட்டது.
அவர் இறந்ததும் அந்த நெல்லி மரமும் பட்டுப் போயிற்று. அருகில் இருந்த ஓர் அரை நெல்லி மரத்தடியில் குருவுக்குப் பின் இவன் தொடர்ந்து அவர் பணியைச் செய்தான்.
ஆனால், பாதி மந்திரம் மட்டுமே சொன்னதால் யாருக்கும் முழுதும் குணம் ஆகவில்லை. ஓலைச்சுவடியில் குரு எழுதியதில் பாதி மட்டும்தான் இருந்ததால் அதை வைத்துக்கொண்டு ஒப்பேற்றினான். சோதிடத்தில் பாதியே பலித்தது.
மக்களுக்கு வர வர இவன் வைத்தியம் மற்றும் மாந்திரீகத்தில், சோதிடத்தில் நம்பிக்கை குறைய ஆரம்பித்தது. இவனிடம் வந்தால் பாதி காரியம்தான் நடக்கும் எனத் தெரிந்த மக்கள் இவனுக்கு ""அரை நெல்லிக்காய்'' சாமியார் என்று பட்டம் சூட்டிவிட்டார்கள். குருவிடம் முழுதாகக் கற்கவில்லையே எனத் தன்னையே நொந்து கொண்டார் அரை நெல்லிக்காய் சாமி.
-என்.எஸ்.வி. குருமூர்த்தி, கும்பகோணம்.