காசில்லாமல் பாகற்காய்
அழகிய வீட்டின் பின்புறத்தில்அதுவாய் முளைத்தது பாகற்கொடி
அழகிய வீட்டின் பின்புறத்தில்
அதுவாய் முளைத்தது பாகற்கொடி
தழைத்து வளர்ந்திடத் தவிக்கிறது
தண்ணீர் கொஞ்சம் தாருங்கடி!
பழகிய மண்ணில் தவழ்ந்தாலும்
பற்றி மேலே படர்வதற்கு
இலைகள் காய்ந்த மரக்கிளையை
எடுத்து நடுவோம் வாருங்கடி!
பச்சைத் தளிர்கள் கைநீட்டும்
பரந்து கிளையில் பாய்விரிக்கும்
உச்சிக் கிளையின் தலைவரையில்
ஓடிப் படரும் பாருங்கடி!
மஞ்சள் நிறத்தில் பூப்பூக்கும்
மளமள என்றே பிஞ்சாகும்
கொஞ்ச நாளில் காய்த்துவிடும்
குழம்பு வைப்போம் கூடுங்கடி!
வாய்க்குக் கொஞ்சம் கசந்தாலும்
வயிற்றுப் புழுக்கள் மாய்ந்துவிடும்
நோயாம் சர்க்கரை தீர்ந்துவிடும்
நொடியில் சமைப்போம் ஓடுங்கடி!
காசில் லாமல் பாகற்காய்
கடையில் கேட்டால் கிடைக்குமா?
ஆசை யோடு பாடுபட்டால்
அனைத்தும் கிட்டும் கூறுங்கடி!
-ஆத்தூர் சுந்தரம்