கதைப்பாடல்: கறுப்பு பலூன் பறக்குமா?
வண்ண வண்ண பலூன்கள்வானத்திலே ஆடின!உயர உயரச் சென்றனஒளியும் சேர மின்னின!
வண்ண வண்ண பலூன்கள்
வானத்திலே ஆடின!
உயர உயரச் சென்றன
ஒளியும் சேர மின்னின!
விட்டுவிட்டால் வானத்தில்
வெகுதூரம் சென்றிடும்!
ஒருவர் நூலை இழுத்ததும்
ஒன்றாய்க் கீழே வந்தன!
சிவப்பு! நீலம்! பச்சை! மஞ்சள்!
கண்ணைக் கவரும் வண்ணங்கள்!
சிறுவர் எல்லாம் பலூன்காரர்
அருகில் சென்று நின்றனர்!
பந்து, புடலை, பூசனிக்காய்,
சுரையைப்போல, பாம்புபோலப்
பல வடிவக் காற்றுப் பை!
பார்க்கப் பார்க்க மகிழ்ச்சிதான்!
வண்ணம் சிலர் விரும்பினர்!
வடிவம் சிலர் விரும்பினர்!
எண்ணம் செயல் வடிவமாச்சு!
எல்லோரும் வானில் விட்டனர்!
பலூன்காரர் அருகில் ஒரு
சிறுவன் வந்து பலூன் கேட்டான்!
என்ன வடிவம்?..,என்ன வண்ணம்?
என்று அவரும் அவனைக் கேட்டார்!
""ஐயா, எனக்கு ஐயம் ஒன்று...,
அதற்கு பதில் சொல்ல வேண்டும்...,
சிவப்பு, நீலம், பச்சை, மஞ்சள்
சிறப்பாய் மேலே பறக்கிறதே?...,
...கறுப்பு பலூன் ஒன்று விட்டால்
அதுவும் வானில் பறந்திடுமா?''
என்றே கறுப்பு நிறச்சிறுவன்
கருத்தாய் கேள்வி கேட்டானே!
பறப்பதன் காரணம் வண்ணம் இல்லை!
பார்வைக்குத்தான் அது அழகு தம்பி!
பைக்குள் இருக்கும் காற்றே அதனைப்
பறக்க வைக்கும், சிறக்க வைக்கும்!
கறுப்பாய் இருந்தால் என்ன தம்பி?
கருத்தாய்ப் படித்துக் கடைமைகள் ஆற்று!
உள்ளமும் எண்ணமும் உன்னை உயர்த்தும்
உலகில் நீ நிச்சயம் உயர்வாய்!
அவரது சொற்கள் அந்தச் சிறுவனின்
ஐயம் அகற்றின; முகத்தில் மகிழ்ச்சி!
வானைப் பார்த்தான்..,வண்ண பலூன்கள்!
அவற்றின் நடுவே கறுப்பும் ஒன்று!