சிறையும் விடுதலையும்!
என்னடா,விசு, கையிலே கால்பந்து அதோட புல்லாங்குழல்?''
என்னடா,விசு, கையிலே கால்பந்து அதோட புல்லாங்குழல்?''
""அதுவா, தாத்தா..., விளையாடிட்டு வரும்போது சித்தப்பாவைப் பார்த்தேன்...அவர் வாங்கிக் குடுத்தார்''
""இது ரெண்டையும் பார்க்கும்போது எனக்கு ஒரு கதை தோணுது''
""என்ன கதை? சொல்லுங்க தாத்தா ப்ளீஸ்''
""சொல்றேன்...,நீ போய் கை காலெல்லாம் அலம்பிகிட்டு வா''
""ஓ.கே...,தாத்தா, தோ...வந்துடறேன்''
விசு கதை கேட்கும் ஆர்வத்தில் கை,கால்களை சீக்கிரமாக அலம்பிக்கொண்டு திரும்புகிறான்!
""ம்...,சொல்லு தாத்தா''
தாத்தா கதை சொல்ல ஆரம்பித்தார்.
""ஒரு நாள் காற்று தேவதையை ஒரு கால்பந்து நிறைய்ய முழுங்கிடிச்சு! கீழே விழுந்ததும் "தம்ப்'னு எகிறிச்சு! அதுக்கு சந்தோஷம்! நல்லா துள்ளுறோமேன்னு! ஆனா அதோட சந்தோஷம் நிலைக்கலே! இருபத்திரண்டு பேர் காலால அதை உதைச்சுக்கிட்டே இருந்தாங்க. அதுக்கு ரொம்ப துக்கமா போயிடுச்சு! பின்னே? ஆளாளுக்கு உதைச்சா?
அதே காற்று ஒரு மூங்கில் குழலில் இருந்தது! அதை ஒரு வித்துவான் வெளியே ஊதி இனிமையான குழலோசையாய் ஒலிக்கச் செய்தார்! எல்லோரும் மெய்மறந்து கேட்டனர்! கைதட்டல் வேறு! குழல் மோதிரக் கைகளில் மிருதுவாகத் தடவப்படுகிறது! தேர்ந்த வித்துவான்கள் அதை முத்தமிடுகின்றனர்! குழலை வைக்க ஒரு வேலைப்பாடு மிகுந்த பெட்டியும் இருந்தது! இதுலேர்ந்து என்ன தெரியுதுன்னா...,சிறைப்படுத்தி, அடிமைப்படுத்தி வச்சுக்கணும்னு நினைக்கிறவங்க பாடு திண்டாட்டம்தான்! அவங்க நிறைய அடிபடுவாங்க..., கால்பந்தைப் போல. திறந்த குழல் காற்றை அடிமைப் படுத்தறதில்லை! மேலும் அதை ஊதி நாதமாய் அனுப்பி விடுகிறது! அதற்கு மரியாதையும் பாராட்டும் கிடைத்துவிடுகிறது! சுதந்திரத்திற்கு மரியாதை கொடுப்பவர்கள் மதிக்கப்படுகிறார்கள்! புல்லாங்குழலைப்போல!''
""ரொம்ப நல்ல கதை தாத்தா...,தேங்க்ஸ்''