கதைப்பாடல்: வெட்டுக்கிளியின் நடனம்!
வெய்யில் காலம் என்றாலும்வேகவேகமாய் எறும்பெல்லாம்
வெய்யில் காலம் என்றாலும்
வேகவேகமாய் எறும்பெல்லாம்
வரிசைதன்னில் ஒழுங்காக
வாழ்வுக்கு இரையைத் தேடினவே!
அரிசித் துணுக்கை, நெல்மணியை,
கோதுமை, கம்பு, கேழ்வரகை,
பரிசில் பெற்ற புலவரைப்போல்
எடுத்துச் சென்றன புற்றுக்கு!
புல்லில் தாவித் திரிகின்ற
பச்சை வெட்டுக் கிளியொன்று
பார்த்தது எறும்பின் செய்கையினை
""பாவம்..,பாவம்...! பரிதாபம்!...,
...எங்கும் வெய்யில் அடிக்கிறது...!
எளிதாய் உணவும் கிடைக்கிறது!
எதற்கு இந்த வீண் வேலை?
என்னைப் போல ஆடுங்கள்!''
என்றே சொல்லித் துள்ளியது
எறும்பின் செயலை எள்ளியது!
எறும்புகள் பணியை நிறுத்தவில்லை
ஏச்சையும் பேச்சையும் கேட்கவில்லை!
அடுத்து வந்தது மழைக்காலம்!
அன்று உழைத்த உழைப்பாலே
அலைந்து சேர்த்த உணவாலே
அமைதியைப் பெற்றது எறும்பெல்லாம்!
வெட்டுக் கிளியோ மழையினிலே
வேதனையோடு வந்ததுவே!
உண்ண உணவு கிடைக்கவில்லை
ஊரிலும் அடைமழை விடவில்லை!
எறும்புப் புற்றுக்கு வந்தது அது...,
""எளிதாய் உங்களை நினைத்து விட்டேன்...
உங்களைக் கேலி பல செய்தேன்
உங்கள் அறிவு எனக்கில்லை!...
...நாளைய பொழுதை இன்றைக்கே
நன்றாய் நினைத்துச் செயல்பட்டால்
ஒவ்வொரு நாளும் இனிதாகும் - இதனை
உணர்ந்தேன் உங்கள் செயல்மூலம்!''
கண்ணீர் விட்டது வெட்டுக்கிளி
கருணை மிகுந்த எறும்புகளோ,
இருந்ததில் சிறிது உணவுதனை
ஈந்தன அந்த உயிருக்கு!