சாய்வு நாற்காலி!
தலைமைஆசிரியர் வைத்தியநாதனுக்கு அன்று பள்ளியில் பணி ஓய்வு பாராட்டு விழா.
தலைமைஆசிரியர் வைத்தியநாதனுக்கு அன்று பள்ளியில் பணி ஓய்வு பாராட்டு விழா.
பல பழைய மாணவர்களும் வந்து கலந்து கொண்டனர்.
அவர்களுள் மாவட்ட ஆட்சியர் பாலகிருஷ்ணனும் ஒருவர்.
அவர் பேசும் போது, ""எனக்கு கணக்கே சரியாக வராது.. நம்ம ஹெச்.எம் சார் என்னைப் பலதரம் பிரம்பால் அடிச்சிருக்கார். அந்த ஒவ்வொரு அடியும் என் வாழ்க்கையில் நான் முன்னேற அடியா இருந்துச்சி..இனியாவது அவர் ஓய்வெடுக்க வேண்டும்.. இந்த சாய்வு நாற்காலியை அவருக்குப் பரிசாக அளிக்கிறேன்..''
எல்லோரும் கை தட்ட பரிசை ஏற்றுக் கொண்ட வைத்தியநாதன் எல்லோரிடமும் பிரியா விடை பெற்றார்.
மாவட்ட ஆட்சியர் பாலகிருஷ்ணன் ஹெச்.எம் வைத்தியநாதனைத் தன் காரில் அழைத்து வந்து அவர் வீட்டில் இறக்கினார்.
கார் டிக்கியில் இருந்து ஈஸி சேர் இறக்கப்பட்டது. அவர் புறப்படும் போது ஹெச்.எம்., ""பாலு, இந்த சேருக்கு பில் இருக்கா..?''
""ஓ இருக்கு சார்..'' அதை நீட்ட அதை வாங்கிக் கொண்டார்.. விலை எழு நூறு என்று போட்டிருந்தது.
மறு நாள் பில்லில் இருந்த கடைக்கு வைத்தியநாதன் சென்றார் ஈஸி சேருடன். கடைக்காரர் எழுந்து வரவேற்றார்.. ""வாங்க சார்..''
வைத்தியநாதன், ""இந்த ஈஸி சேருக்குப் பதிலா எனக்கு மூன்று பிளாஸ்டிக் சேர் தரமுடியுமா..'' பில்லை நீட்டினார்.
""ஓ.. மாத்திக்கலாம் சார்..''
பிளாஸ்டிக் சேர்களை ஒரு ஆட்டோவில் ஏற்றும் போது வைத்தியநாதன் கடைக்காரரிடம், ""என் கணித அறிவு வீணாகக் கூடாது..சாய்வு நாற்காலியில் நான் ஓய்வெடுக்க விரும்பவில்லை.. இது போல நாற்காலிகளில் நாலு மாணவர்களை அமரச் செய்து கணிதம் சொல்லித்தரவே விரும்புகிறேன்..''
பர்னிச்சர் கடைக்காரரும் ஆசிரியரின் பழைய மாணவர்.
""சார்! நாளைக்கே ஒரு கரும்பலகை தயார் செய்து வீட்டுக்கு அனுப்பிடறேன் சார்!'' என்றார்.