கதைப்பாடல்: பழமும் பழனி முருகனும்
இந்த உலகைப் படைத்திட்ட இறையவன் சிவனும் உமையோடு
இந்த உலகைப் படைத்திட்ட
இறையவன் சிவனும் உமையோடு
சிந்தை மகிழ அன்புடனே
சிறப்பாய்ப் பெற்றனர் இரு பிள்ளை!
தொந்தி பெருத்த கணபதியும்
தொல்லை எதுவும் இல்லாமல்
முந்தி வந்து பிறந்ததனால்
மூத்த பிள்ளை ஆனாரே!
அழகும் அறிவும் ஒருசேர
அன்பின் உருவாய்த் திகழ்கின்ற
எழில்மிகு முருகக் கடவுள்தான்
இளைய மகனாய் வந்துதித்தார்!
நாரத முனிவர் தந்திட்ட
நாவில் இனிக்குமோர் மாம்பழத்தை
யாருக்குத் தருவது என்றேதான்
சிவனும் உமையும் சிந்திக்க
அண்ணன் தம்பி இருவரினில்
அகிலம் தன்னை முழுவதுமாய்
எண்ணி ஒருமுறை சுற்றிவிட்டு
இங்கே முதலில் வருபவர்க்கே
இனிக்கும் இக்கனி உரியதென்று
இருவருக் குள்ளே ஒரு போட்டி
கனிவாய் சிவனும் அறிவிக்க
கருத்துடன் இருவரும் இசைந்திட்டார்!
செயல்திறம் மிக்க முருகனுமே
சிறிதும் தயக்கம் இல்லாமல்
மயில்மீது ஏறிப் புறப்பட்டார்
மண்ணுலகு இதனைச் சுற்றிவர!
கருத்து மிக்க கணபதியோ
சிறிது நேரம் சிந்தித்தார்!
பெருமை மிக்க பெற்றோரே
பேருலகு இதனைப் படைத்தவர்கள்
இவர்களைச் சுற்றி வந்தாலே
இவ்வுலகைச் சுற்றுதற் கொப்பாகும்
எவரும் மறுக்க முடியாது
என்றே பெற்றோரைச் சுற்றிவந்தார்!
வெற்றி பெற்ற கணபதிக்கு
வழங்கப் பட்டது அக்கனியே!
வெற்றிவேல் முருகனும் போட்டியிலே
வெற்றி வாய்ப்பை இழந்திட்டார்!
அழகிய முருகனும் தோல்வியினால்
அடக்க முடியாச் சினம்கொண்டு
பழனிக் குன்றின் மீதேறிப்
பழனி ஆண்டியாய் அமர்ந்திட்டார்!
சிந்தனைத் திறனே ஒருவருக்குச்
சிறந்த வெற்றியைத் தருமென்று
இந்தக் கதையும் உணர்த்துவதை
இனிதே நாமும் அறிவோமே!