முத்துக் கதை: ஒளி!
கடலில் ஒரு படகில் பயணித்துக் கொண்டிருந்தான் ஒருவன். இயற்கையின் சீற்றத்தால் பயணம் செய்த அவனது சிறு படகு சின்னாபின்னமாகியது!
கடலில் ஒரு படகில் பயணித்துக் கொண்டிருந்தான் ஒருவன். இயற்கையின் சீற்றத்தால் பயணம் செய்த அவனது சிறு படகு சின்னாபின்னமாகியது! எப்படியோ அவன் மட்டும் ஒரு தீவின் கரையில் மயக்கமுற்ற நிலையில் ஒதுங்கினான்.
மயக்கம் தெளிந்து எழுந்த போது தான் ஒரு தீவில் இருப்பதை உணர்ந்தான். தீவில் ஒருவருமில்லை. மரங்கள், பறவைகள், மற்றும் சில விலங்குகள் மட்டுமே இருந்தன. பழங்களை சாப்பிட்டுக்கொண்டு காமா சோமா என்று ஒரு பரணைக் கட்டிக்கொண்டு, உறங்கி, விலங்குகளுடன் பழகிக்கொண்டு வாழ ஆரம்பித்தான்.
தன் சொந்த ஊருக்குச் செல்லும் ஏக்கத்துடன் வேறு வழியின்றி அந்தக் காட்டில் வருத்தத்துடன் வசிக்க ஆரம்பித்தான். இலை தழைகளை முட்களால் தைத்து ஆடையை மாற்றிக்கொண்டான். இறைவனை எந்நேரமும் தனக்கு ஒரு நல்ல வழி பிறக்க வேண்டும் என்றும் தன் சொந்த ஊருக்குத் திரும்பி மனைவி மக்களைப் பார்க்க வேண்டும் என்றும் தினமும் பிரார்த்தித்துக் கொண்டு இருந்தான்.
ஒரு நாள் காய்ந்த கழிகளாலும் காய்ந்த ஓலைகளினாலும் ஒரு அழகிய கூடாரம் அமைத்துக்கொண்டான். வேக வைத்த உணவு சாப்பிட்டு வெகு நாட்கள் ஆனது. அன்று அவனுக்கு உணவை வேக வைத்துத் தின்ன ஆசை பிறந்தது. ஆனால் தீப்பெட்டியோ அல்லது வேறு நெருப்புப் பற்ற வைக்கும் சாதனங்களோ இல்லாததால் அவனால் உணவை வேக வைத்துச் சாப்பிட முடியவில்லை. மேலும் இருட்டிவிட்டது.
சில சிக்கிமுக்கிக் கற்களைக் கொண்டுவந்து காய்ந்த தேங்காய் நார்களை அதன் இடையில் வைத்துப் பற்ற வைத்தான். அது பற்றிக் கொண்டது. அவனுக்கு மிகவும் மகிழ்ச்சி! சில கிழங்குகளைச் சேகரித்து வைத்திருந்தான். அவற்றைச் சுட்டு வேகவைக்க முயன்றான். ஆனால் துரதிர்ஷ்ட வசமாக அவன் கட்டியிருந்த கூடாரம் தீப்பிடித்துக் கொண்டது. தான் கட்டிய கூடாரம் தீயால் நாசமாகிக் கொண்டிருப்பதைப் பார்த்தான்.
""கடவுளே! உனக்கு இரக்கமில்லையா? ஏன் என்னை இப்படி சோதிக்கிறாய்?'' என்று புலம்பினான்.
அப்போது அந்த வழியாக வந்த கப்பலின் மாலுமி வெகுதூரத்தில் ஒரு நெருப்பு ஜுவாலை தெரிவதைப் பார்த்தான். உடனே தீவின் கரைக்கு வந்தான். தீவில் இருந்தவன் தன் கதையை அவனிடம் சொன்னான். மாலுமி அவனுக்கு ஆறுதல் சொல்லி, தன் கப்பலில் அவனை ஏற்றிக் கொண்டான்.
தனது பிரார்த்தனை வீணாகவில்லை என்றும் கடவுளின் எல்லாச் செயலுக்கும் ஓர் அர்த்தம் இருக்கும் என்பதை உணர்ந்தான். ""அவன் தீபமாகவும் இருப்பான்...,தீயாகவும் இருப்பான், எதிலும் இருப்பான்...., என்ற நம்பிக்கையோடு வணங்கி வந்தால் நிச்சயம் காப்பாற்றுவான்..'' என்று மாலுமியிடம் கூறிக்கொண்டு மகிழ்ச்சியோடு பயணத்தை மேற்கொண்டான்.