கதைப்பாடல்: பயிற்சியும் முயற்சியும்
மண்ணில் புதையும் விதைக்குள்ளேமறைந்தே யிருக்கும் பெரிய மரம்!
மண்ணில் புதையும் விதைக்குள்ளே
மறைந்தே யிருக்கும் பெரிய மரம்!
தண்ணீர் தந்திடும் மின்சாரம்
தெரிவது இல்லை கண்களுக்கு!
கல்லுக் குள்ளே சிற்பமுண்டு
கல்லும் அதனை அறிவதில்லை!
நெல்லுக் குள்ளே நல்லரிசி
நெல்லுக் கென்றும் தெரிவதில்லை!
ஆழ் கடல் அதனில் முத்துண்டு
அலை கடல் அதனை அறிவதுண்டா?
ஆழ்ந்து கிடக்கும் ஆற்றல்கள்
அவரவர் அறிய முடிவதில்லை!
கற்கும் மாணவர் மனங்களுக்குள்
காண முடியாது ஒளிந்திருக்கும்
பற்பல ஆற்றலை அறிவதற்குப்
பயிற்சியும் முயற்சியும் துணையாகும்!
விளக்கும் குடத்துள் இருந்திட்டால்
வெளிச்சம் வெளியே தெரிவதில்லை!
ஒளியைத் தந்திடும் சூரியன்தான்
ஓட்டிடும் இருளை அறிவோமே!
பயிற்றிடும் ஆசான் துணையோடு
பயிற்சியும் முயற்சியும் இருந்திட்டால்
உயர்ந்த ஆற்றல் வெளிப்படுமே
உலகம் அதனால் பயன்பெறுமே!