முகப்பு
சிறுவர்மணி

ஹலோ... பாட்டியம்மா..!

பேரன் மாணிக்கம் பட்டாசை கையில் எடுத்ததும்...

Updated On : 28 அக்டோபர், 2016 at 4:00 PM
பகிர்:
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:04 AM

பேரன் மாணிக்கம் பட்டாசை கையில் எடுத்ததும்...
பேத்தி ஹரிணி: கொஞ்ச நேரம் பொறுமையா இரு... பாட்டியம்மா இப்போ போன் பண்ணுவாங்க... பேசி முடிச்சதும் பட்டாசை வெடிக்கலாம்..
பேரன் மாணிக்கம்: அதுவும் சரிதான்... (பாட்டியம்மாவின் போன் அழைப்பு ஒலிக்கிறது) அட.... இதோ வந்தாச்சே.... பாட்டியம்மாவோட போன்!!
பேத்தி: அது வோடபோன் இல்ல... டாடா டொகோமோ..!
பேரன்: தீபாவளி "கடி'யா...? சரி.. போனை ஆன் பண்ணு...!
பாட்டி: பேரன், பேத்திக்கு என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்...!
பேரன், பேத்தி இருவரும்: பாட்டியம்மாவுக்கும் எங்களோட தீபாவளி நல்வாழ்த்துகள்!
பேத்தி: பாட்டி, மாணிக்கம் இப்பவே ஒரு பெட்டி நிறைய பட்டாசை காலி பண்ணிட்டான்... கேட்டால், தீபாவளி அன்னிக்கு சிக்கனம் பார்க்கக்கூடாதுன்னு சொல்றான்...
பாட்டி: தீபாவளிக்கு மட்டுமல்ல... என்றைக்குமே சிக்கனமாக இருப்பதுதான் நல்லது. அக்டோபர் 30ஆம் நாள் "உலக சிக்கன தின'மாக கடைப்பிடிக்கப்படுகிறது.
பேத்தி: "உலக சிக்கன தினம்' எப்படி வந்தது பாட்டி..?
பாட்டி: சிக்கனத்தின் அவசியத்தையும், சேமிப்பின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துவதற்காக 1924-ஆம் ஆண்டு அக்-30ஆம் நாள் இத்தாலி நாட்டின் மிலான் நகரில் சர்வதேச சேமிப்பு வங்கிகள் ஒன்றுகூடி சிக்கன மாநாடு ஒன்றை நடத்தினார்கள்.அதுவே "உலக சிக்கன தினம்' உருவாக காரணமாக அமைந்தது...
பேரன்: சிக்கனம் என்றால் என்ன பாட்டி..? 4 இட்லி சாப்பிடுவதை 2 இட்லியாக குறைத்துக் கொள்ள வேண்டுமா..?
பாட்டி: பசிப்பதற்கு ஏற்ப புசிக்க வேண்டும். உணவு இருக்கிறது என்பதற்காக வயிறு நிரம்பிய பின்னும் உண்ணுவது தவறு..! அதே சமயம் கஞ்சத்தனம் காட்டுவதும் தவறு..!
உதாரணமாக... நமது பணத்தை தேவையானவற்றுக்கு செலவு செய்யாமல் இருப்பது கஞ்சத்தனம்..! தேவையானவற்றுக்கு மட்டும் செலவு செய்வது சிக்கனம். தேவை இல்லாதவற்றுக்கு செலவு செய்வது ஆடம்பரம். வரவை மீறி, கடன் வாங்கி கண்டபடி வீண் செலவு செய்வது ஊதாரித்தனம்... வரவை மீறி செலவு செய்பவர்கள் நல்ல பண்புகளை இழக்க நேரிடும்.
சிக்கனத்தைப்பற்றி வள்ளுவர், "ஆகாறு அளவு இட்டிது ஆயினும் கேடில்லை போகாறு அகலாக்கடை' (குறள்-478) அதாவது, வரவு பெரிதாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை; செலவு சிறிதாக இருக்கும்வரை கேடில்லை என்கிறார். இதைவிட அழகாக சிக்கனத்தைப் பற்றி வேறு என்ன சொல்வது...?
பேரன், பேத்தி: பாட்டி... நாங்களும் பட்டாசு வெடிப்பதில் சிக்கனத்தை கடைப்பிடிக்கப்போறோம்... மிச்சமாகும் பட்டாசுகளை இல்லாதவர்களிடம் கொடுத்து வெடிக்கச் செய்வோம்...
பாட்டி: ரொம்ப சந்தோஷம்... நல்லது கண்மணிகளே..! மீண்டும் தீபாவளி வாழ்த்துகள்..!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.