மரங்களே வரங்கள்!
மரங்கள் எத்தனை வகையாகும்! - அவைமாபெரும் உலகுக்கு வரமாகும்!
மரங்கள் எத்தனை வகையாகும்! - அவை
மாபெரும் உலகுக்கு வரமாகும்!
இறைவனின் படைப்பில் உன்னதமாம்! - அது
இயற்கை வளம் தரும் அற்புதமாம்!
உலகத்தில் மரங்கள் பலகோடி! - அவை
உயிர்களின் வளர்ச்சிக்கு உயிர்நாடி!
அழகாய் பெரிதாய் வளர்ந்திடுமே!
அது பறவைகள் வாழ்ந்திட இடம் தருமே!
மரங்களின் அழகே கிளைகள்தான்! -அவை
மனதினை மயக்கிடும் சிலைகள்தான்!
கரங்கள் போன்றே விரிந்திருக்கும்! - அதில்
இலையுடன் மலர்கள் பூத்திருக்கும்!
காய், கனி தருவதும் மரங்கள்தான்! - இதைக்
காத்திட நாம் மறக்கலாமோ!
தாய்போல் நேசிக்க வேண்டுமடா! - மரம்
சுவாசக் காற்றைத் தூண்டுமடா!
தாவரம் உலகுக்கு ஆதாரம்! - இதை
தருகின்ற மரங்களோ தாயாகும்!
யாவரும் பசுமையைக் காப்போமே! - நாம்
இறைவனின் வரத்தைப் பெறுவோமே!