சேவை!
ஷர்புதீன் என்று ஒரு இஸ்லாமியப் பெரியவர் இருந்தார். அவர் சிறு வயது முதற்கொண்டே தாய், தந்தையரை மிகவும் மதித்து நடப்பவர்.
ஷர்புதீன் என்று ஒரு இஸ்லாமியப் பெரியவர் இருந்தார். அவர் சிறு வயது முதற்கொண்டே தாய், தந்தையரை மிகவும் மதித்து நடப்பவர்.
அவருக்கு ஏழு வயதாயிருந்தபோது ஒருநாள் இரவு நேரம். அவருடைய தாயார் சோர்வாகப் படுத்திருந்தார். அவரது தாயார் சிறுவன் ஷர்பூதீனிடம், ""மகனே! ஷர்புதீன்! எனக்கு தாகமாக இருக்கிறது, கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா'' என்று கூறினார்.
ஷர்புதீன் ஒரு குவளையில் நீர் எடுத்து வந்தார். அதற்குள் தாயார் உறங்கி விட்டார். என்ன செய்வதென்று ஷர்புதீனுக்கும் தெரியவில்லை. தாயாரை எழுப்பினால் அவரது தூக்கம் கலைந்து கஷ்டப் படுவாரே என நினைத்து எழுப்பவும் மனமின்றி குவளைத் தண்ணீருடன் நின்றிருந்தார். விழித்தவுடன் அம்மாவுக்கு தண்ணீர் தரவேண்டும் என்ற எண்ணம் அவருக்கு! அவ்வாறே இரவு கழிந்தது.
பொழுது புலர்ந்தது தாயாரும் கண் விழித்தார்! மகன் தண்ணீர்க் குவளையுடன் நிற்பதைப் பார்த்து, ""மகனே! நீ இரவிலிருந்து இப்படியே நின்று கொண்டிருக்கிறாயா?'' என்று கேட்டார்.
""ஆம் அம்மா! நீங்கள் கண் விழித்தவுடன் தண்ணீர் கொடுப்பதற்காகக் காத்துக் கொண்டிருந்தேன்'' என்று ஷர்புதீன் பணிவுடன் தெரிவித்தார்.
இதைக் கேட்டு தாயார் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். நல்ல மகனைத் தந்ததற்காக இறைவனுக்கு நன்றி சொன்னார்! ஷர்புதீன் பெரியவரான பின்பு மிகப் பெரிய மகானாய் இறை நேசராய்த் திகழ்ந்தார்!