கதை பாடல்!: நரியை நரிகள் விரட்டின!
அடர்ந்த காட்டின் சிறிய பொந்தில் ஆமை ஒன்று வசித்தது!அடக்கம் ஒடுக்கம் இரண்டி னோடும்
அடர்ந்த காட்டின் சிறிய பொந்தில்
ஆமை ஒன்று வசித்தது!
அடக்கம் ஒடுக்கம் இரண்டி னோடும்
அன்பு கலந்து வாழ்ந்தது!
அடுத்த புதரில் கிறுக்கு நரியோ
அகந்தை மிகுந்து திகழ்ந்தது!...
துன்பப் படுத்தி மகிழுகின்ற
கீழ்மை புத்தி வளர்த்தது!
புதரை விட்டுத் தினமும் காலை
கிளம்பும் பொழுது ஆமையை
அதட்டி அழைத்து தலையை நீட்டச்
சொல்லி ஓங்கிக் குட்டிடும்!....
வலி தாளாமல் ஆமை துடிக்கும் - நரி
ரசித்து மகிழ்ந்து புறப்படும்!
பல நாளாக இதனைப் பார்த்துப்
பரிதவித்த குரங்கொன்று
மரத்தை விட்டுக் கீழே இறங்கி
நரியை நோக்கி நடந்தது
கரங்கள் இரண்டும் குவித்து வணங்கி
கனிவாய்ச் சொன்னது நரியிடம்....
""ஆமை தலையில் தினமும் குட்டி
வலியால் வருந்தச் செய்வது
தீமை என்று தெரிந்தும் நீங்கள்
செய்தல் சரியோ?''...என்றது.
""..."வலி' என்று ஒன்று இருந்தால்
விழியின் எதிரே காட்டுங்கள்!....
வலியை பார்த்த பின்பு எனது
வழக்கம் நிறுத்தி விடுகிறேன்!''
என்று கிண்டல் செய்து குரங்கை
இறுமாப்போடு பார்த்தது!
வென்று விட்டோம் என நினைத்து - வேப்ப
மரத்தின் கீழே அமர்ந்தது!
இருவர் வாதம் முழுதும் கேட்டு
இதயம் கொதித்த கருந்தேள்தான்
உரிமையோடு ஆமைக்குதவும்
உணர்வு கொண்டு நகர்ந்தது!
கொடுக்கைத் தூக்கி நரியின் தொடையில்
கொட்டி ஓடி ஒளிந்தது!
கடுமையான வலியால் நரியோ
கதறி ஊளையிட்டது!
ஊளை கேட்டு விலங்கனைத்தும்
ஓடி வந்து கூடின!
மூளை கெட்டு நரி புரிந்த
மூர்க்கம் கேட்டு வெட்கின!
""இப்போ துனது வலியை ஆமை
விழிமுன் காட்டு பார்க்கலாம்!....
....கேடு செய்யும் எவரும் அக்
கேடால் அழிவர்!....'' என்றன!
நரிகள் திரண்டு இழிந்த நரியை
காட்டை விட்டே விரட்டின!
பரிவு கொண்டு ஆமை வாழ்வைப்
பாதுகாத்து மகிழ்ந்தன!