கிளியே நானும் உன்னைப்போல்
பார்க்கப் பச்சை நிறம்தானே!
அழகிய மூக்கும் எனக்குண்டு
அத்தனை அழகும் உன்னைப்போல்!
பழுத்தால் உந்தன் அலகைப்போல்
பவளச் சிவப்பு எனக்கும் வரும்!
கொழுந்த எந்தன் குடும்பத்தை
குடைமிளகாய் எனக் குறிப்பார்கள்!
மிளகாய் என்று என்னை நீ
மெத்தனமாக எண்ணாதே!
கிளியே நானும் உன்னைப்போல்
அழகில் சிறந்தவள் அறியாயோ?
உன்சோ திடத்தை விரும்பிடுவோர்
முழுவதுமாக உனை நம்பி
பாடாய்ப் படுத்தி பலன் சொல்ல
பணிந்து உன்முன் அமர்வார்கள்!
என்னை நம்பிக் கண்ணேறு
கழிக்க விரும்பும் மானிடர்கள்
மண்ணில் எறிவர் தலைசுற்றி!
மதிப்பில் இருவரும் ஒன்றன்றோ!
இருப்பினும் நீயோ அன்பின்றி
என்னைக் கொத்தித் தின்கின்றாய்!
வெறுப்பினைக் காட்டி என்னை நீ
விரோதியாக எண்ணாதே!
நம்மால் முடிந்த உதவிகளை
நாட்டில் செய்து உயராமல்
சும்மா ஏற்றத் தாழ்வுகளை
சுமத்த வேண்டாம் கிளியண்ணா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.