மருந்து!
வைத்தியநாதன் அந்தப் பாக்கெட்டை வாங்கிப் பார்த்தார்.
வைத்தியநாதன் அந்தப் பாக்கெட்டை வாங்கிப் பார்த்தார்.
கடைக் காரர் "சார் இது நல்லா வேலை செய்யும்.. வீட்டுக்கு வெளியே போயிடும். தக்காளியை கீறி வைங்க போதும். அதனால் உங்களுக்குப் பிரச்சினை இல்லை..கேக்கை விட இது பெட்டர்..'
அந்த எலி மருந்தை வாங்கிக் கொண்டு வீட்டில் யார் கண்ணிலும் படாமல் ஒரு இடத்தில் வைத்தார். ஒரு தக்காளி பழத்தை எடுத்து நடுவில் கீறி இந்த பேஸ்ட்டை அமுக்கி வைத்தார். இதை எலி கண்ணில் படும் இடத்தில் வைத்தால் தான் எலி சாப்பிடும்.
நடந்தது இது தான்.
போன வாரம் மிக்ஸி ஓடவில்லை என அவர் மனைவி புகார் செய்தாள். பார்த்தால் எலி ஒயரைக் கடித்து வைத்திருந்தது. தூக்கிப் போய் புது ஒயரை மாற்றி வந்தார். நேற்று கிரைண்டர் ஒயரைக் கடித்து அது ஓடவில்லை. மெக்கானிக் வீட்டுக்கு வந்து ஒயரை மாற்ற தண்டச் செலவு நூற்றைம்பது ஆகி விட்டது.
"எலிக்கு மருந்து வைங்க.. இல்லாட்டி எதையும் விட்டு வைக்காது'
எல்லோரும் படுத்ததும் மருந்து வைத்த தக்காளியை எடுத்துக்கொண்டு பரணில் ஏறினார். டார்ச் அடித்து ஒரு நல்ல இடம் தேடினார்.
தக்காளியை ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு இறங்கிய போது அந்த மெல்லிய "கீச்' முனகல் சத்தம் அவர் கவனத்தை ஈர்த்தது.
ஐந்து எலிக் குஞ்சுகள்.. புதிதாகப் பிறந்தவை..கண் மூடிப் படுத்திருந்தன. மெல்லிய வால் ஆடியது. தாய் எலி இல்லை.
பல் முளைக்கும் பருவத்தில் தான் எலிகள் நற நற என இருப்பதால் கூரிய பற்களால் எதையாவது கடிக்கும் என அறிந்திருந்தார் வைத்திய நாதன். இந்த தக்காளியை தாய் எலி சாப்பிட்டு விட்டால் என்ன செய்வது. புதிய குஞ்சுகள் தாயைத் தேடி வெம்பி விடுமே. அப்புறம் அவை உயிர் வாழ்வதும் கஷ்டமாச்சே.
சே..அந்தப் பாவம் நமக்கு வேண்டாம்.
வைத்த தக்காளிப் பழத்தை எடுத்து தெரு குப்பைத் தொட்டிக்குள் ஒரு கவரில் இறுக மூடி வீசி ஏறிந்தார்.
மனைவி கேட்டாள், "என்னங்க.. எலி மருந்து வச்சீங்களா..'
"ஓ பரணில் வச்சிட்டேன்..எலி செத்திடும்.. தண்ணீர் தேடி எங்காவது வீட்டுக்கு வெளியில் போயி தான் சாவுமாம். கடைக்காரர் சொன்னார்.'
அதற்குப் பிறகு என்ன ஆச்சரியம்... எலித் தொல்லையே இல்லை அவர் வீட்டில்.