புத்தாண்டே வருக!
சித்திரை முதல் நாள் எங்களுக்குச்சீராய் வந்த புத்தாண்டே!கடலலை தவழும் தமிழ் மண்ணில்
சித்திரை முதல் நாள் எங்களுக்குச்
சீராய் வந்த புத்தாண்டே!
கடலலை தவழும் தமிழ் மண்ணில்
காலடி பதிக்க வருவாயே!
விளம்பி ஆண்டு விடைபெறவே
"விகாரி' நீயும் வந்தாயே!
உளத்தினில் மகிழ்ச்சி பொங்கிடவே
உயர்வினை நீயும் தருவாயே!
ஊர்கள் எல்லாம் வளம் பெறவும்
உழவும் தொழிலும் சிறந்திடவும்
நீர்நிலை யாவும் நிரம்பிடவும்
நலமிகு ஆண்டே நீ வருக!
தளரா உழைப்பு வென்றிடவும்
தக்க பயனைப் பெற்றிடவும்
களத்தினில் நெல்மணி குவிந்திடவும்
களிப்புடன் நீயும் வருவாயே!
புவியின் வெப்பம் தணிந்திடவும்
பெருகிடும் மாசைக் குறைத்திடவும்
செவியில் இனிக்கும் தமிழாலே
சிறப்பாய் உன்னை வரவேற்றோம்!