மரங்களின் வரங்கள்!: பெண்களுக்கு சாமி கொடுத்த வரம் கல்யாண முருங்கை மரம்
பெண்களுக்கு சாமி கொடுத்த வரம் கல்யாண முருங்கை மரம்
பெண்களுக்கு சாமி கொடுத்த வரம் கல்யாண முருங்கை மரம்
என்ன குழந்தைகளே நலமாக இருக்கிறீர்களா, நான் தான் கல்யாண முருங்கை மரம் பேசுகிறேன். எனது தாவரவியல் பெயர் எரித்திரினா வெரிகட்டா மற்றும் எரித்ரினா இன்டிகா என்பதாகும். நான் ஃபபாசியே குடும்பத்தைச் சேர்ந்தவன். எனக்கு முள் முருங்கை, முருக்க மரம், என்ற பல பெயர்களும் உண்டு. என்னை ஆங்கிலத்தில் டைகர்ஸ் கிளாவ், இண்டியன் கோரல் ட்ரீ, சன்ஷைன் ட்ரீ என்றும் அன்புடன் அழைப்பார்கள்.
மிளகுக் கொடிகளைப் படரவிடவும், காபிப் பயிர்களுக்கு இடையில் நிழலுக்காகவும் என்னை வளர்க்கிறார்கள். தோட்டத்துக்கு மட்டுமல்ல, மக்களின் வாட்டத்தைப் போக்கவும் கைகொடுத்து உதவும் மகத்தான மரம் நான். அக்கால மக்கள் என்னை வீட்டிற்கு முன்பாக நட்டு அழகுப் பார்த்தார்கள். அதற்கு ஒரு காரணம் இருக்கு, நான் வீட்டின் முன்பாக இருந்தால் அந்த வீட்டில் குடியிருக்கும் பெண்களுக்கு கருப்பை நோய் வராது என்ற ஒரு ஐதீகம் உண்டு. கிராமப் புறங்களில் வேலி ஓரமாக வளரும் என்னிடம் எண்ணற்ற மருத்துவக் குணங்கள் இருக்கு.
Advertisement
குழந்தைப் பேருக்கு நான் ஒரு வரம். இன்னொரு உயிரை கொடுக்கும் பெண்களுக்கு இந்த வரம் சாமி கொடுத்த வரம் என உங்க ஊர் பாட்டிமார்கள் சொல்வதை நீங்க கேட்டிருப்பீங்க. அந்த அளவுக்குப் பெண்களுக்கு ஏற்படும் நோய்களனைத்தையும் தீர்க்கும் வல்லமை எங்கிட்ட இருக்கு. குழந்தை பாக்கியத்துக்கு உத்தரவாதமா நான் இருக்கிறதால, நீ என்ன உன் சகோதரி அரச மரத்துக் போட்டியான்னு என்னை இளக்காறமா பேசறாங்க. நான் கவலைப்படல. நானும் உங்களுக்கு உதவத்தானே இருக்கேன்.
நான் ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்ட மூலிகை மரம். கபம் எனப்படும் நெஞ்சு சளி, இருமல், காய்ச்சல், வயிற்று வலி போன்றவற்றை குணப்படுத்தும் சக்தி என்னிடமுள்ளது. இலையுடன் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து அரைத்து பூசிக் குளித்தால் சொறி, சிரங்கு குணமாகும். சளி, வயிற்றுப் பூச்சித் தொந்தரவு உள்ள குழந்தைகளுக்கு என் இலையுடன் கல் உப்பை சேர்த்து அரைத்துக் கொடுக்க வாந்தியிலும், காலைக்கடன் கழிக்கையிலும் கிருமியுடன் சளி வெளியேறும்.
என் இலைகள் அகலமாகவும், பெரியதாகவும் இருக்கும். இலைகளுக்கிடையே முட்கள் இருக்கும். என் பூக்கள் அடர்த்தியாக சிவப்பு நிறத்திலிருக்கும். என் இலைகள், முயல்கள் மற்றும் கால்நடைகளுக்கு உணவாகவும் பயன்படுது.
என் இலைகள், விதைகள் மற்றும் மலர்களில் பல வேதிப்பொருள்கள் உள்ளன. நான் பெண்களின் உடல்நலனில் அக்கறைக் கொண்டவன். என் இலையிலிருந்து ரசம் செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட வயிற்று வலி குணமாகும். என் இலைச்சாற்றை தினமும் குடித்து வந்தால் குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களின் குறை நீங்குவதோடு உடலும் இளைக்கும்.
குழந்தைகளே, நீங்கள் குடல் புழுக்களின் தொல்லையால் அவதிப்பட்டால், கவலைப்படாதீர்கள், அப்படிப்பட்ட நேரத்தில் 10 சொட்டு என் இலைச்சாற்றை சிறிது வெந்நீர், தேன் கலந்து குடிங்க. உடனே பலன் கிடைக்கும். பெரியவர்கள் 4 ஸ்பூன் இலைச் சாற்றுடன் தேன் கலந்து குடித்தால் புழுக்கள் வெளியேறும்.
மேலும், என் இலைச்சாற்றுடன் தேங்காய் மஞ்சள் சேர்த்து அரைத்து மேல் பூச்சாகப் பூசி குளித்து வந்தால், சொறி, சிரங்கு சரியாகும். கிராமங்களில் என் இலையுடன் மிளகு, பச்சரிசி சேர்த்து வடை செய்வார்கள். அது சளியை அகற்றும் தன்மைக் கொண்டது. மேலும், என் இலையுடன் முருங்கை இலை, மிளகு, பூண்டு சேர்த்து அரைத்து சாப்பிட்டால் இரத்த சோகை குணமாகும். என் பட்டை பாம்பு கடிக்கு நல்ல மருத்து.
என் கட்டையின் எடை குறைவாக இருப்பதால் தெருக்கூத்து அன்பர்கள் அணிகலன்கள் செய்ய என்னை பயன்படுத்துறாங்க. கூர்மவதாரம் எடுத்த திருமாலுக்கு என்மரத்தின் கீழ் ஈசன் சுய உருவைக் காட்டியதாக ஐதீகம்.
குழந்தைகளே, இயற்கையின் வழி செல்வோம், மரங்களையும் பயனுள்ள செடி, கொடிகளையும் வளர்ப்போம், பசுமையான பாரதத்தை உருவாக்குவோம் நான் காஞ்சி நகரம், அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோவிலில் தல விருட்சமாக இருக்கிறேன். நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.
(வளருவேன்)