முகப்பு
சிறுவர்மணி

நினைவுச் சுடர்!:  கடமை!

அந்த மாணவன் ஒன்பதாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தான். அந்தப் பள்ளியில் தமிழாசிரியராக யாழ்ப்பாணம் கதிர்வேல் பிள்ளை என்பவர் இருந்தார்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:42 PM
பகிர்:

அந்த மாணவன் ஒன்பதாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தான். அந்தப் பள்ளியில் தமிழாசிரியராக யாழ்ப்பாணம் கதிர்வேல் பிள்ளை என்பவர் இருந்தார். தமிழாசிரியர் மீது சிலர் பொறாமை கொண்டனர். அதனால் நீதி மன்றத்தில் தமிழாசிரியர் மீது ஒரு வழக்கு தொடுத்தனர். அதில் ஆசிரியர் ஒருவரை அடித்துத் துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டியிருந்தனர். 

ஆனால் அதே நாளில் இவர் ஒன்பதாம் வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருந்ததே உண்மை. 

இந்த வழக்குக்கு சாட்சியாக அந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர் அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் சாட்சி சொல்ல வேண்டிய நாளில் அந்த மாணவனுக்குத் தேர்வு நடக்கத் தொடங்கியது. இத்தேர்வில் வெற்றி பெற்றவர்களே பின்னர் நடக்க இருக்கும் அரசாங்கத் தேர்வு எழுத முடியும்.

இந்நிலையில் அந்த மாணவனின் உள்ளம் தத்தளித்தது! ஒரு பக்கம் ஆசிரியரின் நெருக்கடியான நிலை. மற்றொரு பக்கம் தேர்வு. அந்த மாணவன் இறுதியாக தேர்வைத் துறந்து ஆசிரியருக்காக சாட்சி சொல்வது என்றே முடிவு செய்தான்! 

குறிப்பிட்ட நாளில் விசாரணைக்குச் சென்றான் அந்த மாணவன். நீதிபதியிடம் அதே நாளில் தனக்கு முக்கியமான தேர்வு இருப்பதாகவும் கூறினான். நீதி மன்றத்தில் சாட்சி சொல்லிவிட்டு தேர்வு எழுத விரைந்தான் அந்த மாணவன். 

பள்ளிக்குக் காலதாமதமாக வந்த அந்த மாணவனை தேர்வு எழுத அனுமதித்தனர். அவகாசம் குறைவாக இருந்த போதிலும் அந்த மாணவன் முதன்மையாகத் தேறினான். நீதிமன்றமும் தமிழாசிரை வழக்கிலிருந்து விடுவித்தது! ஆசிரியருக்குத் தான் செய்ய வேண்டிய கடமையைச் செய்த நிறைவும் அந்த மாணவருக்கு ஏற்பட்டது. ஆசிரியரும் அந்த மாணவரை அன்புடன் அரவணைத்தார்!

அந்த மாணவன்தான் பின்னாளில் சிறந்த தமிழ்ச் செம்மலாகப் போற்றப்படும் திரு.வி.கலியாண சுந்தரனார்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.