நாரைக் கூட்டத்தில் ஒரு நாரைக்கு கடவுளைக் காண வேண்டும் என்ற திடீர் ஆசை ஏற்பட்டது! ஆவல் மிகுதியால் அது வானத்தை நோக்கி மிக உயரப் பறந்தது! வானம் விரிந்து கொண்டே சென்றது. வானத்தை நோக்கிப் பறந்து கொண்டிருந்தால் கடவுளைக் காண முடியுமா? மேலும் மேலும் பறந்து செல்கையில் நாரைக்கு மிகவும் சோர்வாகிவிட்டது! கண்ணில் தென்பட்ட மலை உச்சியில் நாரை சென்று அமர்ந்தது.
அப்போது ஒரு கழுகு அதன்அருகில் வந்து அமர்ந்தது. அது நாரையை நோக்கி, ""எதற்குக் கவலையாய் இருக்கிறாய்?'' என்று கேட்டது.
""கடவுளைப் பார்ப்பதற்காக வானத்தை நோக்கிப் பறந்தேன்!.....ஆனால் என்னால் பார்க்க முடியவில்லை....சோர்வடைந்ததுதான் மிச்சம்!...'' என்று வருத்தத்தோடு சொன்னது நாரை.
""அட முட்டாளே!.... உன்னோடுதானே கடவுள் இருக்கிறார்!.... நீ பிறந்ததிலிருந்து உன் கூடவே இருக்கிறார்!... உன் இரண்டு பக்கத்திலும் நீ பறந்து வாழத் துணையாக இருக்கிறார்!... இதைக் கூட நீ தெரிந்து கொள்ளவில்லையா?....'' என்று கேட்டது கழுகு!
இப்போது நாரைக்கு நன்றாகப் புரிந்துவிட்டது! அது கவலையை மறந்தது! மகிழ்ச்சி அடைந்தது! உற்சாகமாகப் பறந்து போனது!