யமுனை நதியின் கரையோரம்
அண்ணல் நேரு அவர் வீடு
மகனைச் சீறாய் வளர்த்தாராம்!
மோதிலால் நேரு பெருமகனார்!
அவரின் அறையின் மேஜையிலே
அழகுப் பேனா இரண்டிருக்க
சிறுவன் நேரு, அவ்வறைக்குள்
சிற்றடி வைத்துச் சென்றாராம்!
""எதற்கு இரண்டு பேனாக்கள்...
....எழுத எனது தந்தைக்கு?....
....எனக்கு ஒன்று இருக்கட்டும்!''
என்றே ஒன்றை எடுத்தாராம்!
அறையை விட்டுச் சப்தமின்றி
அண்ணல் நேரு வெளியேற
விரைந்து திரும்பிய தந்தைக்கு
விவரம் எதுவும் தெரியவில்லை!
எழுது கோலை இங்குமங்கும்
எங்கும் தேடிக் கிடைக்காமல்
அழைத்து மகனிடம் கேட்டதுமே
அழுதே விட்டார் நம் நேரு!
அஞ்சி நடுங்கிப் போனாலும்
அருமை நேரு "ஆம்' என்றே
கெஞ்சும் குரலில் கனிவோடு
தெரிவித்தாராம் தந்தையிடம்!
தந்தை அவரை அடிக்கவில்லை
தனயன் மெய்மை பாராட்டி
நெஞ்சில் வைத்து மனமகிழ்ந்து
நெருங்கி அணைத்துக் கொண்டாராம்!
திருடல் தவறு எனச் சொல்லி
அருமை மகனின் ஆசையினை
உணர்ந்து தீர்க்கும் விதமாக
ஒன்றைப் பரிசாய்த் தந்துவிட்டார்!
திருட்டு தீய குணங்களிலே
தலைமையான தீதாகும்!
ஒரு பொய் சொன்னால் கூட அது
ஒழுக்கக் கேட்டைப் பெருக்கிவிடும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.