கேள்வி: உலகின் சிறந்த கண்டுபிடிப்பாக "சக்கரம்' கருதப்படுகிறது. இது எப்படி புழக்கத்திற்கு வந்தது?
பதில்: சக்கரம் எப்போது யாரால் கண்டுபிடிக்கப்பட்டது என்பது பற்றி நிச்சயமாகச் சொல்ல முடியாது. மனிதன், உயரமான மலைகளிலிருந்து, உருண்டு ஓடி வரும் கற்கள் சீக்கிரம் நிலத்தை அடைவதைப் பார்த்திருக்கலாம்! வட்ட வடிவ இலைச் சருகுகள் வேகமாகச் சுழல்வதைப் பார்த்திருக்கலாம். வெடித்துச் சிதறும் விதைகளின் சுழற்சியைக் கண்டிருக்கலாம்! சக்கரத்தின் கண்டுபிடிப்பு சுழற்சியைப் பார்த்ததால்தான் ஏற்பட்டிருக்கக்கூடும்!
சரி, சக்கரம் கண்டுபிடித்தபின் அதைக் குயவர்கள்தான் முதலில் பயன்படுத்தினர். ஒரு சக்கரத்தைப் படுக்க வைத்து அதன் மையப் பகுதியில் களிமண்ணைக் குவித்து வைத்து சக்கரத்தைச் சுழல விட்டு கைகளால் அக்களிமண்ணை வனைந்து, வழுவழுவென்று மண் பானைகளை உருவாக்கினர்.
இது நடந்த காலம் சுமார் 5,500 ஆண்டுகளுக்கு முன்பு. மெஸபடோமியாவில் இதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. பிறகு அதற்கு ஓர் அச்சாணி பொருத்தி, ஒற்றைச் சக்கர வண்டியாகச் செய்தனர். இதன் மூலம் பாரமான பொருட்களைக் கொண்டு செல்லப் பயன்படுத்தினர். பிறகு? இரண்டு சக்கரங்கள்! நான்கு சக்கரங்கள்!.... ரயில் வண்டிகளில் ஏராளமான சக்கரங்கள்! சக்கரம் இன்று வரை மாறவே இல்லை. அதை இயக்குவதற்கான சக்திகள் வேறுபடலாம். அந்த முதல் கண்டுபிடிப்பு இன்று வரை உலகை ஆட்டி வைக்கிறது! உலகின் முதல் கண்டுபிடிப்பும், சிறந்த கண்டுபிடிப்பும் சக்கரம்தான்! இந்திய தேசியக் கொடியில் சக்கரம் நடுவில் இருப்பது இந்நேரத்தில் நினைவில் வருகிறது! தர்ம சக்கரம்! அருமை!