முகப்பு
சிறுவர்மணி

மண்ணை ஆளும் மழை!

சூரிய வெப்பம் தணிவுற்றுசுழன்று வீசும் குளிர் காற்று!மாரி என்னும் பேர் பெற்று 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:18 PM
பகிர்:


சூரிய வெப்பம் தணிவுற்று
சுழன்று வீசும் குளிர் காற்று!
மாரி என்னும் பேர் பெற்று 
வானில் உலவும் நீரூற்று!

எட்டுத் திசையும் இடி முழங்கும்
சிட்டுக் குருவிகள் கூடடையும்
கொட்டும் மழையின் வரவதனை
வெட்டும் மின்னல் தெரிவிக்கும்!

முட்டை கொண்டு எறும்புகளும் 
திட்டை நோக்கிப் பயணிக்கும்!
தட்டும் தவிலிசை போலினிதாய்த்
தவளைக் கூட்டம் சுதி சேர்க்கும்!

சேற்று நண்டுகள் வசிப்பதற்கு 
ஏற்ற இடத்தைத் தேடி வரும்!
காற்று சாமரம் வீசிடவே 
கடலின் அலைகள் கூத்தாடும்!

வான்முகம் நோக்கும் பசும்புல்லும் 
வாழ்த்துப் பாடி வரவேற்கும்!
மாநிலம் முழுதும் செழித்தோங்க 
மழையின் ஆட்சி தொடங்கிவிடும்!

மழை நீர்த் துளியைத் தலை சுமந்து 
மரங்கள் மகிழ்ச்சியில் அசைந்தாடும்!
அழகிய மயில் தன் தோகையினை 
அகல விரித்து நடனமிடும்!

மண்ணில் இட்ட விதை யாவும் 
முளைத்துப் பசுமைப் பாய் விரிக்கும்!
கண்ணிற்கினிய எழிற்காட்சி
கார் தரும் மழையின் நல்லாட்சி!

காலம் போடும் கணக்குகளில் 
கவனக் குறைவுகள் கிடையாது!
ஞாலம் போற்றும் இயற்கைதான் 
நடத்தும் ஆட்சியில் பிழை ஏது?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.