நினைவுச் சுடர்!: விளையும் பயிர்...
பள்ளி, கோடை விடுமுறையில் திருக்குறளில் உள்ள 1330 குறட்பாக்களையும், நாலடியாரில் சில நூறு வெண்பாக்களையும் மனனம் செய்தார் ஒருவர்.
பள்ளி, கோடை விடுமுறையில் திருக்குறளில் உள்ள 1330 குறட்பாக்களையும், நாலடியாரில் சில நூறு வெண்பாக்களையும் மனனம் செய்தார் ஒருவர். உயர்நிலைப் பள்ளி படிப்பை முடித்தவுடன் திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் எழுத்தரானார். வித்துவான் முதனிலைத் தேர்வுக்கு ஆயத்தமானபோதே, தொல்காப்பியம் போன்ற நூல்களில் பல பகுதிகள் அவருக்கு மனப்பாடம். அதனால், வித்துவான் தேர்வில் (1935-ஆம் ஆண்டு) மாநிலத்திலேயே அதிக மதிப்பெண் பெற்று, ரூ.1000 பரிசு பெற்றார்.
ஒரு முறை, சொந்த ஊரான வேலம் கிராமத்திலுள்ள மலை மீது ஏறி, அங்குள்ள ஆலமரத்தின் கீழே அமர்ந்து சிலப்பதிகாரத்தை நீண்ட நேரம் தன்னை மறந்து படித்துச் கொண்டிருந்தார். அப்போது, எதிரே மிகப் பெரிய பாம்பு படமெடுத்து நின்றது. உடனே எழுந்து விலகிச் சென்றார். என்றாலும், அச்சப்படாமல் தினமும்
அங்கேயே சென்று அமர்ந்து படித்தார்.
இப்படி நிறைய படித்ததால்தான் பின்னாளில் கல்லூரிப் பேராசிரியராகி, கல்லூரியின் துணை வேந்தராகவும் ஆனார். 62 வயதிற்குள் 85 நூல்களையும் எழுதினார். அவருக்குத் தமிழ், ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் எழுதவும், பேசவும் தெரியும்.
Advertisement
Advertisement
இளமையில் கல்வியில் மட்டுமே அதிக கவனம் செலுத்தினால், வாழ்வில் உயர்ந்து நிற்பது நிச்சயம் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர்தான் தமிழறிஞர் டாக்டர் மு.வரதராசனார்.