தங்கத் தாத்தா
எஸ்.ஆர்.ஜி.சுந்தரம்
எஸ்.ஆர்.ஜி.சுந்தரம்
தாத்தா பாட்டி என்போர் எல்லாம்
தளர்ந்துப் போன உடலோர் அல்லர்!
மூத்தோர் பெரியோர் ஆகியோர் எல்லாம்
முடங்கிக் கிடப்போர் மட்டும் அல்லர்!
---
ஆண்டு பலவும் கடந்த அவர்கள்
அனுபவப் பாடம் அடைந்தோர் ஆவர்!
வேண்டும் அறிவை வழங்க வல்லார்
விரும்பும் வாழ்வைக் கரும்பாய்ச் சொல்வார்!
---
நல்லன தீயன நன்றாய் அறிந்தார்
நெருங்கிக் கேட்பின் தெளிவாய் உரைப்பார்!
சொல்வன தங்கச் சுடர்கள் போல
செய்யின் வாழ்வைச் சிறக்க வைப்பார்!
பண்புடன் பொறுமைப் பணிவிடைச் செய்திடின்
பல்கலைப் பயின்ற தாகும்நம் உள்ளமே!
எண்ணி யிவற்றை என்றும் நடந்திடின்
இல்லம் எல்லாம் அன்பு வெள்ளமே!