ஒட்டுண்ணிகள்
இந்த கடல்வாழ் ஒட்டுண்ணிகள் உலகம் முழுவதும் 700 வகைகள் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. ஒரே நேரத்தில் லட்சக்கணக்கில் முட்டையிட்டு பல்கிப் பெருகும் இந்த ஒட்டுண்ணிகள் எந்த ஜீவராசிகளையும் விட்டு வைப்பதில்லை.
இந்த கடல்வாழ் ஒட்டுண்ணிகள் உலகம் முழுவதும் 700 வகைகள் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. ஒரே நேரத்தில் லட்சக்கணக்கில் முட்டையிட்டு பல்கிப் பெருகும் இந்த ஒட்டுண்ணிகள் எந்த ஜீவராசிகளையும் விட்டு வைப்பதில்லை. உயிரினங்களின் உடலில் பிரிக்க முடியாத வகையில் ஒட்டிக்கொண்டு அந்த உயிரினத்தையே செயல்படவிடாமல் ஆக்கிவிடுபவை.
கடலில் ஒட்டுண்ணிகளால் ஏற்படும் பாதிப்புகள் மீன் இனத்தையே வெகுவாகப் பாதிப்பதாகவும் இதன் செயல்பாடுகள் குறித்து பரங்கிப்பேட்டை கடல்வாழ் உயிரியல் உயராய்வு மையத்தின் பேராசிரியர் எஸ்.ரவிச்சந்திரன் விவரிக்கிறார்.
""ஒட்டுண்ணிகளுக்கு தட்டையான உடல் அமைப்பும், கூர்மையான வாய் மற்றும் நகங்களும் இருக்கின்றன. மீன்களின் உடலில் நகங்கள் மூலமாக ஆழமாக பதித்துக் கொண்டு வாழும் இவை கடல் அலைகளில் இருந்தும் தம்மை பாதுகாத்துக் கொள்கின்றன. கடல் ஒட்டுண்ணிகள் மீன்களின் செவுள்களை உண்பதால் மீன்களால் சரியாக சுவாசிக்க முடியாமல் அதன் செவுள்கள் செயலிழந்து விடுகின்றன. இவற்றின் ரம்பம் போன்ற கூர்மையான வாய்ப் பகுதியும் கால் பகுதியும் மீன்களுக்கு மிகப்பெரிய கேட்டினை விளைவிக்கின்றன.
சிலவகை ஒட்டுண்ணிகள் மீன்களின் வாய்ப்பகுதியில் வசித்து அதனை சேதப்படுத்துவதால் மீன்களின் உணவு உட்கொள்ளும் திறனைப் பாதிப்படையச் செய்கின்றன. வேறு சில வகைகளோ மீன்களின் சதைப்பகுதியை உண்டு சேதப்படுத்துகின்றன. எனவேதான் மீன்களை வாங்குவோர் அதனை எப்போதும் மிக நன்றாக சுத்தம் செய்து சரியாக வேக வைத்த பின்னரே சமைத்துச் சாப்பிட வேண்டும். இல்லையேல் அதன் மூலம் நமக்கும் தொற்றுநோய்கள் பரவிவிட வாய்ப்பிருக்கிறது.
கால்கள் ஒரே அளவாகவும் ஒரே வடிவத்துடனும் காணப்படும் ஒட்டுண்ணி ஐசோபேடா என்ற வகையைச் சேர்ந்தது. இவ்வகை ஒட்டுண்ணிகள் மீன்கள் முலமாக கிடைக்கின்ற பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்கின்றன. எனவே இவற்றைப் பற்றிய விரிவான ஆய்வு நடத்த மத்திய சுற்றுச்சுழல் துறை, அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறைகளின் நிதியினை பெற்று கடல் உயிரியல் உயராய்வு மையத்தின் இயக்குநர் டாக்டர்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் பரங்கிப்பேட்டையில் பல்வேறு ஆய்வுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஐசோபேடா வகை ஒட்டுண்ணிகளால் மீன்கள் உடனடியாக இறப்பதில்லை என்றாலும் மீன்களின் வளர்ச்சி, எடை, இனப்பெருக்கம், சுவாசித்தல், உணவு உட்கொள்ளுதல், ரத்த ஓட்டம் ஆகியன பெருமளவில் பாதிக்கப்பட்டு பொருளாதார வளர்ச்சியைப் பாதிப்பதாகவும் ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
இவற்றில் ஆண், பெண் என இரு பாலினங்கள் இருப்பினும் பெண் ஒட்டுண்ணிகள் அளவில் பெரிதாகவும் இதன் வயிற்றுப்பகுதியில் இவற்றின் குஞ்சுகளைப் பாதுகாக்க கங்காரு போன்ற பெரிய பைகளும் உள்ளன'' என்றார்.