முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

தரம் பாதி; ஜனரஞ்சகம் மீதி!

தொலைக்காட்சியின் நானாவித சேனல்கள் மக்களின் வீட்டு வரவேற்பறையை ஆக்ரமிக்கத் தொடங்கிய காலகட்டமான எண்பது, தொண்ணூறுகளில் வானொலி என்கிற சாதனம் கிட்டத்தட்ட வழக்கொழிந்து போயிருந்தது. சென்ற பத்து பதினைந்து வரு

Updated On : 28 டிசம்பர், 2023 at 6:57 PM
பகிர்:

தொலைக்காட்சியின் நானாவித சேனல்கள் மக்களின் வீட்டு வரவேற்பறையை ஆக்ரமிக்கத் தொடங்கிய காலகட்டமான எண்பது, தொண்ணூறுகளில் வானொலி என்கிற சாதனம் கிட்டத்தட்ட வழக்கொழிந்து போயிருந்தது. சென்ற பத்து பதினைந்து வருடங்களாக வானொலியின் எஃப்.எம். ஒலிபரப்புக்கள் புத்தம் புதிய பொலிவுடன் புது சிந்தனைகளை முன் வைத்து ரசிகர்களை ஒட்டுமொத்தமாகத் தன் பக்கம் திருப்பியது.

 தொலைக்காட்சியைப் பார்க்க வீட்டுக்கு ஓடிவரவேண்டும். ஆனால் ஒரு கையடக்கமான ரேடியோ மூலம் (இப்போது மொபைல்களிலும் கேட்கலாம்) ஆபீஸிலும், ஓடும் பஸ்ஸிலும் ஆட்டோவிலும் பயணித்தபடியே பாட்டு கேட்கலாம். பழவண்டி தள்ளுபவரும், பூ விற்பவரும், வாயில் காப்போரும் பொழுதுபோக்கிற்கு எஃப்.எம். அலைவரிசையைத்தான் நம்புகிறார்கள்.

 அனைத்து தரப்பு மக்களிடமும் ஆதிக்கம் செலுத்துவதாலோ என்னவோ இந்த ஒலிபரப்பாளர்கள் பெரிதும் நம்புவது திரைப்படப் பாடல்களையும் திரை சம்பந்தமான நிகழ்ச்சிகளையும்தான். இவற்றிலிருந்து மாறுபட்டு நிற்கின்றன, 94.3 அலைவரிசையில் நாம் கேட்கும் "ரேடியோ-ஒன்' நிகழ்ச்சிகள். இந்த அலைவரிசையில் கர்நாடக இசையை ஒலி பரப்புவது மட்டுமின்றி, மேடைக் கச்சேரிகளும்

Advertisement

 நடத்திவருகின்றனர்.

 ""ரேடியோ.ஒன்' "சென்னை ஒன் மியூசிக்' என்ற பெயரில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கர்நாடக இசை நிகழ்ச்சிகளை நடத்துகின்றது. இந்த நேரடிக் கச்சேரிகள் மூலம் ரசிகர்களின் நாடித் துடிப்பை அறிய முடிகிறது. அவர்களின் தேவையைப் புரிந்து செயல்பட முடிகிறது. இது எங்களுடைய இயக்குநர் மார்டின் கிங் கருத்து. இதே போன்று மற்ற முக்கிய நகரங்களில் "மும்பை ஒன்', "தில்லி ஒன்' என அந்தந்த இடங்களுக்குரிய இசையை வழங்குகிறோம்.

 சென்னை, கர்நாடக இசையின் இருப்பிடமாக இருப்பதால், கர்நாடக இசையை வழங்குகிறோம்'' என்றார் "சென்னை ஒன்' பொறுப்பாளர், அமீத் ரஹேஜா.

 நித்யஸ்ரீ மகாதேவன், ப்ரியா சகோதரிகள் ஆகியோரின் கச்சேரிகள் நடந்து முடிந்து, இந்த மாத நிகழ்ச்சியாக சமீபத்தில் சுதா ரகுநாதனின் ஜனரஞ்சகமான கச்சேரி நடந்தது.

 சாருகேசி வர்ணத்துடன் கச்சேரியை சுவையாகத் தொடங்கினார். "அருள்புரிவாய் கருணைக்கடலே', "அலைபாயுதே கண்ணா', "குறை ஒன்றும் இல்லை', "கண்டநாள் முதலாய்..' போன்ற பல எளிமையான பாடல்களைப் பாடினாலும், "ஸôமஜ வரகமணா', "மஹாலட்சுமி ஜகன்மாதா' போன்ற அழுத்தமான கீர்த்தனைகளும் பாடி தனது வித்வத்தை வெளிப்படுத்தினார். சங்கராபரண ராக ஆலாபனை நல்ல தரம். "ஸôமஜ வரகமணா' கிருதியில் ஸ்வரங்கள் அபாரம். தரத்தையும் ஜனரஞ்சகத்தையும் சரியான விகிதத்தில் கலந்து மக்களைக் கவர்வதில் சுதாவிற்கு நிகர் அவரே என்பதை மீண்டும் நிரூபித்தார்.

 ""கர்நாடக சங்கீதம் மட்டுமின்றி, கிராமியப் பாடல்கள், பக்தி, பஜன் பாடல்கள் ஆகிய மேடை நிகழ்ச்சிகளும் நடத்தத் திட்டம் இருக்கிறது. சினிமா பாட்டுகள் மட்டும் எங்கள் பட்டியலில் கிடையாது'' என்று நம்மை வியப்பில் ஆழ்த்தினர், "ரேடியோ ஒன்' பொறுப்பளர்கள்.

 நமது மண்ணுக்கே உரிய இசைக்கு முன்னுரிமை தரும் இவர்கள் முயற்சிக்குப் பாராட்டுக்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments