முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

விழியில்லை; ஆனால் வழியுண்டு!

பார்வையிழந்தோரையும், மாற்றுத் திறனாளிகளையும் மட்டுமே கொண்டு கடந்த 40 ஆண்டுகளாக வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது ஆர்ஃபிட் தொழிற்சாலை

Updated On : 28 ஏப்ரல், 2013 at 9:09 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 5:00 PM

பார்வையிழந்தோரையும், மாற்றுத் திறனாளிகளையும் மட்டுமே கொண்டு கடந்த 40 ஆண்டுகளாக வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது ஆர்ஃபிட் தொழிற்சாலை. கேட்டால் ஆச்சரியமாக இருக்கும் ஆனால் உண்மை! திருச்சி பெல் நிறுவனத்துக்கு சிறு உபகரணங்களை செய்து தரும் தொழிலகம்.
 ஆர்பிட் (ஞழ்ஞ்ஹய்ண்ள்ஹற்ண்ர்ய் ஊர்ழ் தங்ட்ஹக்ஷண்ப்ண்ற்ஹற்ண்ர்ய் ர்ச் ற்ட்ங் ஆப்ண்ய்க் ண்ய் பழ்ண்ஸ்ரீட்ஹ்) என்ற சங்கத்தின் மூலம் இந்தத் தொழிலை நிர்வாகம் செய்யப்படுகிறது.
 திருச்சியைச் சேர்ந்த பிரபல கண் மருத்துவர் ஜோசப் ஞானாதிக்கத்தின் மனதில் தோன்றிய இந்த எண்ணத்தை திருச்சியைச் சேர்ந்த சில நல்ல உள்ளங்கள் செயல்படுத்யதின் மூலம் இன்று 75 சதவீதம் பார்வையிழந்தோரையும், 10 சதவீதம் மாற்றுத் திறனாளிகளையும் கொண்டு செயல்பட்டு வருகிறது.
 1973-ம் ஆண்டு 5 பார்வையிழந்தவர்களையும், ஒரு மாற்றுத் திறனாளியையும் கொண்டு தொடங்கப்பட்ட இந்த தொழிற்சாலை தொடக்கத்தில் சாக்பீஸ் தயாரிப்பில் ஈடுபட்டது.
 இங்கு தயாரிக்கப்பட்ட சாக்பீஸ் தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விநியோகிக்கப்பட்டு, அதன் தரத்துக்காக பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது.
 அதன் பின்னர், இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட சலவை சோப் தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்கள், அரசு சாரா நிறுவனங்கள், மருத்துவமனைகள் என விற்பனை செய்யப்பட்டது.
 தமிழ்நாடு சிறுதொழில் மேம்பாட்டுக் கழகத்தால் சிறந்த சலவை சோப் என்ற பாராட்டையும் இந்த சோப் பெற்றது.
 இதைத் தொடர்ந்து, இந்த தொழிற்சாலையை விரிவாக்க எண்ணிய போது தான் கனரக இயந்திரங்கள் மூலம் பெல் நிறுவனத்துக்கு பல்வேறு உபரிப் பொருள்களை தயாரிக்கும் தொழிற்சாலையாக இது உயர்ந்தது.
 கனரக இயந்திரங்களை பார்வையிழந்தவர்கள் இயக்க முடியாது என்ற கருத்தை மாற்றி தொடு உணர்வு மூலம் அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தால், எந்த பணியையும் அவர்களால் செய்ய முடியும் என்பதற்கு இந்த தொழிலகத்தில் பணியாற்றும் பார்வையிழந்தோரை உதாரணமாகக் கூறலாம்.
 இந்த தொழிலகத்தில் மொத்தம் 82 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 50 பேர் பார்வையிழந்தவர்கள், 12 பேர் மாற்றுத் திறனாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொழிற்சாலையின் தலைவராக உள்ளவர் பார்வை குறைபாடு உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 ஆர்ஃபிட் தலைவர் பி.ஆர். பாண்டி: எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் வரையில் எனக்கு கண் பார்வை இருந்தது. அதன் பின்னர் காய்ச்சல் ஏற்பட்டு, பார்வை குறையத் தொடங்கியது. பார்வை குறைந்தவர்களுக்கான ஓராண்டு மெக்கானிக்கல் டிப்ளமோ முடித்துவிட்டு, 1977-ஆம் ஆண்டில் இந்த தொழிற்சாலையில் ஃபிட்டராக பணியில் சேர்ந்தேன். தொடர்ந்து 1989-2000 வரை துணைத் தலைவராகவும், 2001-2005 வரையில் செயலராகவும், 2005-ஆம் ஆண்டு முதல் தலைவராகவும் பணியாற்றி வருகிறேன்.
 இந்த தொழிற்சாலை, சங்கங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது. தொழிற்சாலைக்கான அனைத்து உரிமங்களையும் பெற்றுள்ளோம்.
 இங்கு பணியில் சேர வரும் பார்வையிழந்தோருக்கு ஏற்கெனவே இங்கு பணியில் உள்ள தொழிலாளர்களுடன் இணைந்து தொடு உணர்வு மூலம் முதலில் பயிற்சி அளிக்கிறோம். இரண்டு ஆண்டுகளுக்கு பயிற்சியுடன் உதவித் தொகையும் அளிக்கப்படுகிறது. அதன் பின்னர், அவர்களது பணித்திறனைக் கணக்கில் கொண்டு பணி நிரந்தரம் செய்கிறோம்.
 ஒவ்வொரு இயந்திரத்திலும் பிரதான பணியாளராக ஒரு மாற்றுத் திறனாளியும், உதவிக்கு பார்வையிழந்தவரும் என இங்கு பணி வழங்கப்படுகிறது.
 திருச்சி பெல் நிறுவனத்திலிருந்து ஒப்பந்தப்புள்ளி மூலம் பணி ஆணைகளைப் பெற்று அதை செய்து வருகிறோம். தற்போது, பெல் நிறுவனத்துக்காக 20 வகையான உப பொருள்களை உற்பத்தி செய்து வருகிறோம்.
 கடந்த 2005-ம் ஆண்டில் ராணிப்பேட்டையிலும் இதேபோன்று 15 பார்வையிழந்தவர்கள், 2 மாற்றுத் திறனாளிகளைக் கொண்டு ஒரு தொழிற்சாலையைத் தொடங்கியுள்ளோம். இங்கும் பெல் நிறுவனத்துக்கான உப பொருள்கள் தயாரித்து அளிக்கப்பட்டு வருகிறது.
 தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு திருச்சி கிராப்பட்டியில் 30 வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. மேலும், தொழிலாளர்களுக்கு வீட்டு வாடகை ஒரு பெரும் சுமையாக இருப்பதைக் கருத்தில் கொண்டு பிளாட் முறையில் 30 வீடுகளைக் கட்டி அதை தொழிலாளர்களுக்கு மிகக்குறைந்த வாடகையில் வழங்கவும் திட்டமிட்டு வருகிறோம்.
 இந்த தொழிலகத்தில் கிடைக்கும் லாபத்தை தொழிலாளர்களின் நலனுக்காகவும், பிற மாற்றுத்திறனாளிகளின் நலன்களுக்காகவும் செலவிடுகிறோம்.
 அரசு நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு என்னென்ன சலுகைகள் கிடைக்குமோ (பி.எப்., இ.எஸ்.ஐ., போனஸ்) அனைத்தும் இங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கும் வழங்கப்படுகிறது.
 மிகவும் கடினமான பணிதான், முழுவதும் பார்வையிழந்தவர்களைக் கொண்டு இந்த தொழிற்சாலை செயல்பட்டாலும், இதுவரையில் எந்த விபத்தும் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டதில்லை என்கின்றனர் இங்கு பணியாற்றும் தொழிலாளர்கள்.
 வெற்றிகரமான தனது 40 ஆண்டை நிறைவு செய்து, அந்த விழாவை ஏப். 4-ம் தேதி திருச்சி மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரனை வைத்து அமர்க்களமாய் கொண்டாடி முடித்துள்ளது.

 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.