முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

சென்னையிலும் திருவையாறு ஆராதனை

மார்கழி முடிந்தாலும் மயிலையில் இசை விழா முடிவதில்லை. தொடங்கிவிட்டன தியாகராஜ ஆராதனை விழா. மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் சபா இந்த விழாவினை ஜனவரி 20 முதல் 26ம் தேதி வரை நடத்துகிறது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:31 AM
பகிர்:

மார்கழி முடிந்தாலும் மயிலையில் இசை விழா முடிவதில்லை. தொடங்கிவிட்டன தியாகராஜ ஆராதனை விழா. மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் சபா இந்த விழாவினை ஜனவரி 20 முதல் 26ம் தேதி வரை நடத்துகிறது.

19-ஆம் நூற்றாண்டில் கர்நாடக இசைக்கு புத்துயிர் அளித்து மறுமலர்ச்சி உண்டாக்கியவர்கள் சங்கீத மும்மூர்த்திகள். அவர்களில் ஒருவரான தியாகராஜ சுவாமிகளின் நினைவு நாளை, சங்கீத விற்பன்னர்கள் அவர் இயற்றிய பாடல்களைப்பாடி அந்த மகானுக்கு இசை அஞ்சலி செய்வது வழக்கம்.

தியாகைய்யர் பிறந்த திருவையாற்றில் மட்டும் நடந்து வந்த இந்த ஆராதனை விழா தற்போது சென்னையிலும் பல சபாக்களில் இடம் பெறுகிறது. இந்த விழாவின் மூலம் மார்கழி இசை விழாவில் மேடையேறும் சந்தர்ப்பம் தர இயலாத சில கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்க முடிவது ஒரு கூடுதல் திருப்தி.

Advertisement

இன்றைய இசை உலகில் முன்னணிக்கு வந்து கொண்டிருக்கும் ஸ்ரேயஸ் நாராயணன், டாக்டர் எஸ்.சுந்தர், சுமித்ரா வாசுதேவ், அருணா ரங்கநாதன், கே. விஜயகுமார், சுகன்யா, பந்துளரமா ஆகியோரின் கச்சேரியும், இறுதி நாளன்று இசை மழலை ராம்ஜியின் குழுவைச் சேர்ந்த இளம் கலைஞர்கள் வழங்கும் பஞ்சரத்ன கீர்த்தனையும் இடம் பெறுகிறது.

கடந்த 23ஆம்தேதி நடைபெற்ற அருணா ரங்கநாதனின் கச்சேரி கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. உஷா ராஜகோபாலன் வயலின், கே.ஆர். கணேஷ் மிருதங்கம், ஈ.எம்.சுப்ரமண்யம் - கடம். என மூத்த கலைஞர்களின் கை தேர்ந்த பக்க வாத்தியங்களுடன் அந்நாள் நிகழ்ச்சி நடந்தது.

தியாகைய்யர் பல அபூர்வ ராகங்களில் க்ருதிகள் இயற்றியிருக்கிறார். பகுதாரி, கானமூர்த்தி, ரூபவதி, சூர்யகாந்தம், ஜெய மனோஹரி, கன்னட போன்ற பல ராகங்களின் ஸ்வரூபத்தை இந்த ராகங்களில் தியாகராஜர் இயற்றியுள்ள ஓரிரு கீர்த்தனைகளேயானாலும் அவற்றிலிருந்து நன்கு தெரிந்துகொள்ளலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில்தான் அதிகம் மேடையில் கையாளப்படாத சுவையான உருப்படிகளைப் பாடுவது பொருத்தமாகவும் இருக்கும். இதை நன்கு பயன்படுத்திக்கொண்டார் பாடகி அருணா ரங்கனாதன். அவரின் திட்டமிடலே இதனை உறுதி செய்தது.

முதலில் ஜெய மனோஹரி ராகத்தில் "யக்ஞாதுடு' என்ற பாடல். தொடர்ந்து சூரியகாந்தம்

ராகத்தில் "முத்துலோமு ஏலாதுசே' என்ற க்ருதியும் "மனசூனி' என்ற இடத்தில் நிரவல் ஸ்வரமும் விறுவிறுப்பாக பாடினார். அடுத்து, உமாபரணம் ராகத்தில் அமைந்த "நிஜமர்மமுலனு தெலிசின வாரிகி' என்ற கீர்த்தனை. அதில் அமைந்த சிட்டஸ்வரம் பளிச்சென்று இருந்தது. அடுத்து காபி ராக ஆலாபனையும் "நித்ய ரூப எவரிபாண்டித்யமேமி' பாடலும் நல்ல ராக பாவத்துடன் அமைந்தது.

அடுத்ததாக வந்த கோகிலத்வனி ராக க்ருதியான "தொலினேனு ஜேயு'விலும் சுவையான சிட்டஸ்வரம். தொடர்ந்து தோடி ராக ஆலாபனையும் "கத்தனு வாரிகி' என்ற இடத்தில் நிரவலும் ஸ்வரப்ரஸ்தாரமும் மிகவும் நேர்த்தியாக இருந்தது. "பஜரே பஜமானஸ' என்ற கன்னட ராக பாட்டுடன் கச்சேரியை நிறைவு செய்தார் அருணா.

காபி, சூர்யகாந்தம் மற்றும் தோடி ராக ஆலாபனைகளில் அருணாவின் முதிர்ச்சி தெரிந்தது.

அவரது குரு மும்பை எஸ். ராமச்சந்திரன் அமைத்த விறுவிறுப்பான சிட்டஸ்வரங்கள் அவரின் இசையை மேலும் மெருகூட்டின. உஷாவின் வயலின் வாசிப்பு நல்ல அனுசரனையுடன் அமைந்தது. பக்கவாத்தியக் கலைஞர்கள் தமது தேர்ந்த வாசிப்பினால் கச்சேரியை தூக்கி நிறுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments