தமிழ் மொழி காக்கப்பட வேண்டும் என்பதற்காகவே ஆசிரியர்களுக்காக 15 ஆண்டுகள், மாணவர்களை இணைத்து 3 ஆண்டுகள் என தமிழ் மொழியை காக்க சுற்றுலாவை தன் வசப்படுத்தி வருகிறது மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம். மலேசிய அரசு நிபந்தனைகளின்படி 6-ஆம் வகுப்புக்கு மேல் 6 ஆண்டுகளுக்கு இடைநிலைக் கல்வி உள்ளது. இக் கல்வி முடித்து உயர்கல்விக்கு செல்ல வேண்டும். உயர்கல்வியில் தமிழ் இலக்கியம் நிலைத்திருக்க வேண்டும் எனில் தமிழ் வழியில் கற்றவர்கள் குறைந்தது 500 மாணவர்களாவது உயர்கல்வியில் தமிழைத் தேர்வு செய்ய வேண்டும். இல்லையெனில் உயர்கல்வியில் தமிழ் மொழி இல்லாத நிலை உருவாகும். தெலுங்கு, மலையாளம், பஞ்சாபி உள்ளிட்ட மொழிகள் இல்லாமல் போன நிலை வந்தபோது விழித்துக் கொண்டது மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம். இடைநிலைக் கல்வியில் தமிழ் மொழியை விருப்பப் பாடமாக எடுத்து தேர்வு செய்யும் மாணவர், மாணவிகளை தமிழின் மீது ஆர்வம் கொள்ளச் செய்ய சுற்றுலா எனும் ஆயுதத்தை கையில் எடுத்தது.
கம்பராமாயணம், சிலப்பதிகாரம், அகல்விளக்கு என இலக்கியங்களை வெறும் புத்தகங்கள் வழியாகவே படித்து, காட்சிகளை மனதில் உருவெடுத்துக் கொண்ட மாணவர்களை தமிழகம் அழைத்து வந்து தமிழ்ச் சமூகத்தின் தொன்மைகளையும், இலக்கியம் பிறந்த விழுமியங்களையும் நேரில் கண்டு களிக்கச் செய்கிறது. இதோடு நின்றுவிடாமல் தமிழ்ப் பல்கலைக் கழகம் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கும் அழைத்துச் சென்று மாணவர்கள், பேராசிரியர்களுடன் இலக்கியம் குறித்த கலந்துரையாடல் நிகழ்வுகளையும் நடத்தி வருகிறது.
தமிழன்னை, தமிழ்க் கடவுளை தரிசிக்கும் வாய்ப்பையும் வழங்கி வருகிறது. நிகழாண்டு (2018) மாணவர்கள் 29 பேர் மற்றும் 6 ஆசிரியர்களை அழைத்துக் கொண்டு தமிழகம் வந்திறங்கியது சுற்றுலா குழு (மலேசிய கல்விக் குழு). ஜூன் 7 முதல் 14 வரை என 8 நாள்களுக்கு தமிழை வாசிக்கவும், நுகரவும், சுவைக்கவும், கண்ணில் நிலை நிறுத்தவும் தயார்படுத்திக் கொண்டது.
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர்
பெ. இராஜேந்திரன், தலைமையில் வந்த இக் குழுவினர், சங்கம் வளர்த்து தமிழ் வளர்த்த மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் மீனாட்சியம்மன் கோயிலையும் கண்டு களித்தனர்.
தமிழ்ச் சமூக கட்டடக் கலைகளை காணும் வகையில்
நகரத்தாரின் அரண்மனைகளை கானாடுகாத்தான், சிவகங்கை பகுதிகளுக்கு சென்று பார்த்து வியந்தனர். கம்பனின் சமாதியை சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டைக்கு சென்று பார்த்தனர். காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகங்களுக்கு சென்று செவிகளுக்கான தமிழ் விருந்தை அருந்தினர். பொள்ளாச்சி என்ஜிஎம் கலை அறிவியல் கல்லூரியில் இயங்கும் மலேசிய எழுத்தாளர் ஆதிகுமணன் அறக்கட்டளையின் செயல்பாடுகளை கேட்டறிந்து, இருதரப்பிலும் இலக்கிய விருந்து பரிமாறப்பட்டது. தஞ்சை பெரிய கோயில், தமிழ்க் கடவுள் முருகன் வீற்றிருக்கும் பழனி ஆலயங்களை தரிசித்து, முள்ளி வாய்க்கால் முற்றத்தில் தமிழினம் அழிக்கப்பட்ட வரலாற்று நினைவு சின்னத்தைக் கண்டு கண்கலங்கினர்.
இந்த சுற்றுலாவுக்கு களம் அமைத்து, தமிழால் மலேசியாவுக்கும், தமிழகத்துக்கும் இடையே பாலம் அமைத்து அளப்பரிய தமிழ் பணியாற்றி வரும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ. இராஜேந்திரன்
கூறியது:
மலேசிய அரசின் உயர்கல்வியில் தமிழ் நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்ட இந்த முயற்சியால், இன்றைய சூழலில் 10 ஆயிரம் மாணவர்கள் மலேசியாவில் உயர்கல்வியில் தமிழை விருப்பப்பாடமாக தேர்வு செய்யும் நிலை வந்துள்ளது. அதோடு மட்டுமின்றி தமிழ் இலக்கியத்தையும் ஆர்வத்துடன் கற்று வருகின்றனர். மலேசியாவில் உள்ள எழுத்தாளர்களை கண்டறிந்து தங்க விருது வழங்குவதைப் போன்று, தமிழகத்தில் பொள்ளாச்சி என்ஜிஎம் கல்லூரியில் தமிழவேள் ஆதிகுமணன் அறக்கட்டளை, தமிழ் பல்கலைக் கழகத்தில் சிங்கப்பூர் முஸ்தபா அறக்கட்டளையின் சார்பில், தமிழவேள் கோ. சாரங்கபாணி ஆய்விருக்கை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சிங்கப்பூர், மலேசியா, தமிழக எழுத்தாளர்களுக்கு ஆண்டுதோறும் "கரிகால சோழன் விருது' வழங்கப்படுகிறது.
தமிழ் இலக்கியம் தொடர்பான சிங்கப்பூர், மலேசியா நூல்களுக்கு தனி நூலகம் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டு அதற்கு ஆதி குமணன் பெயரிடப்பட்டுள்ளது. அயலகத் தமிழர்களின் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு தமிழை கொண்டு சேர்ப்பதிலும், கடல் கடந்து, காணியெங்கும் தமிழ் மணம் பரப்பும் பணியை தவறாது செய்து வருகிறோம். அதற்கு இந்த சுற்றுலா இருதரப்பை இணைக்கும் பாலமாக அமைந்துள்ளது'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.