தமிழ்மணியால் விருது பெற்றேன்!
புள்ளியல் துறை துணை இயக்குநராக இருந்து ஓய்வு பெற்றவர் பி. கலைமணி. கவிஞர், நூலாசிரியர், மேடைப்பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர், பட்டிமன்ற பேச்சாளர் எனவும் பெயர் பெற்றவர்.
புள்ளியல் துறை துணை இயக்குநராக இருந்து ஓய்வு பெற்றவர் பி. கலைமணி. கவிஞர், நூலாசிரியர், மேடைப்பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர், பட்டிமன்ற பேச்சாளர் எனவும் பெயர் பெற்றவர். அதுமட்டுமல்ல, 75 மணி நேரம் தொடர்ந்து நடைபெற்ற கவிதை வாசிப்புப் போட்டியில் கலந்து கொண்ட கின்னஸ் சாதனையாளரும் ஆவார். இவருக்கு அண்மையில், "தமிழ்ச்செம்மல்' விருது தினமணியின் தமிழ்மணி மூலம் கிடைத்திருக்கிறது. அது எப்படி என்று விளக்குகிறார் கலைமணி:
"அரியலூர் மாவட்டம், இலையூர் கிராமம்தான் எனது பூர்வீகம். 1984- இல் புள்ளியியல் துறையில் ஆய்வாளராக பணிக்கு சேர்ந்தேன். 2006 - இல், கரூருக்கு பணிமாறுதலில் சென்ற போது தினமும் காலை, மாலை ரயில் பயணம் அவசியமாகிப் போனது. ரயில் பயணத்தில் இணைந்த நண்பர்கள் குழுவுடன் பயண நேரத்தில் கவிதை எழுதி வாசிப்பேன். நண்பர்கள் அளித்த ஊக்கத்தின் காரணமாக எனது கவிதை தொகுப்பு வெளியானது. கரூர் தமிழ்ச் சங்கத்தால் 2007-இல் "கவி அருவி' எனும் விருது வழங்கப்பட்டது. இந்த விருதே என்னை தமிழ் மொழியின் பக்கம் இழுத்து வந்தது. குரல் வளம் நன்றாக இருந்ததால் திருச்சி மற்றும் காரைக்கால் வானொலி நிலையத்தில் பல்சுவை நிகழ்ச்சிகள், அற உரை, நேருக்குநேர் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தது. பொதிகை தொலைக்காட்சியிலும் நம் விருந்தினர் வாய்ப்பு கிடைத்தது. பட்டிமன்றங்களிலும் பேசும் வாய்ப்பை தந்தது. பின்னணிப் பாடகி பி. சுசிலாவுடன் இணைந்து மேடையில் பாடும் வாய்ப்பும் கிடைத்தது.
அதுமட்டுமின்றி, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, புது தில்லி, மும்பை, பெங்களூரு என பல்வேறு நகரங்களில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கம், தமிழ்ச் சங்க நிகழ்ச்சியில் பங்கேற்று பல விருதுகளை பெற்றுள்ளேன். "கவி அருவி கலைமணி கவிதைகள்', "சிந்தனை மின்னல்கள்', "நெஞ்சம் எனும் வானிலே', "வாழ்ந்து காட்டுவோம்', "வாழ்வியல் நெறிகள்' உள்ளிட்ட 5 நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளேன். இருப்பினும், கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நடந்த கருத்தரங்கில் தினமணியின் தமிழ்மணி குறித்து தொகுத்து வழங்கிய கட்டுரைக்கு தமிழ்ச் செம்மல் விருது (2018) கிடைத்திருப்பதையே என் தமிழ்ப்பணிக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக கருதுகிறேன்.
தமிழ்ச் செம்மல் விருது கிடைத்தது எப்படி?
தினமணியில் ஞாயிறுதோறும் வெளியாகும் தமிழ் மணியானது தமிழைக் கற்க விரும்புவோருக்கான வகுப்பறையில்லா கல்விக் கூடமாகும். மொழியின் உச்சரிப்புகள், உரைநடைகள், தூய தமிழ் சொற்கள், இலக்கணங்கள் இலக்கியங்கள், தமிழறிஞர்கள், சங்க இலக்கியங்கள் மற்றும் அதன் ஆசிரியர்கள், வாழ்வியல் நெறிகள் என அடுக்கடுக்கான தரவுகளை தரவுள்ள தமிழுக்கான விக்கிப்பீடியாகவாக திகழ்கிறது. இதன் சிறப்புகளை தொகுத்து கட்டுரையாக அளிக்கும் வாய்ப்பை கொழும்பு தமிழ்ச் சங்கம் எனக்கு வழங்கியது. இலங்கையில் பிப்ரவரி இறுதியில் நடந்த பன்னாட்டு இதழியல் கருத்தரங்கில் இக்கட்டுரை சமர்ப்பிக்கப்பட்டு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளபட்டது. இறுதியில், தமிழ்ச்செம்மல் விருதையும் ஈட்டித் தந்தது. தினமணியால் கிடைத்த தமிழ்ச் செம்மல் விருதே எனக்கான சாகித்ய அகாதெமியாக கருதுகிறேன்.
-ஆர். முருகன்.
படம்: எஸ். அருண்.