முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

தமிழக இளைஞர் சாதனை

செல்போனே உலகம் என்று மூழ்கியிருக்கும் இன்றைய இளைஞர்களின் மத்தியில் தன்னுடைய எழுத்தால் கிராமத்து இளைஞர் ஒருவர் கனடா பிரதமரிடமிருந்து பாராட்டு பெற்றுள்ளார். யார் அவர்? 

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:51 AM
பகிர்:

செல்போனே உலகம் என்று மூழ்கியிருக்கும் இன்றைய இளைஞர்களின் மத்தியில் தன்னுடைய எழுத்தால் கிராமத்து இளைஞர் ஒருவர் கனடா பிரதமரிடமிருந்து பாராட்டு பெற்றுள்ளார். யார் அவர்? 
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கண்கொடுத்தவணிதம் என்ற கிராமத்தைச் சேர்ந்த அருண்மொழிவர்மன் என்ற இளைஞர்.
"அப்பா இறந்து விட்டதால் பிளஸ் 2 படிப்பை முடித்த பிறகு தொடர்ந்து படிக்க முடியவில்லை. 15 ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கு வேலைக்குச் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அம்மா, தங்கச்சி இருவருக்கும் தேவையான அனைத்தையும் செய்ய வேண்டிய குடும்பப் பொறுப்பு வந்தது. டிகிரி படிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் ஒரு பக்கம். ஆனால் வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் ஒரு புறம் உந்துதலை ஏற்படுத்தி கொண்டே இருந்தது. 
சென்னையில் செய்த வேலையை விட்டுவிட்டு சொந்த ஊருக்கு திரும்பினேன். இருந்த நிலத்தில் விவசாயம் பார்த்து குடும்பத்தை காப்பாற்றி விடலாம் என்ற தைரியத்தில் வந்துவிட்டேன். இதற்கு இடைப்பட்ட காலத்தில் எம்பிஏ மனித வள மேலாண்மை படிப்பை முடித்தேன்.
அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்த போது ஆங்கில அறிவை மேம்படுத்திக் கொள்ள நினைத்தேன். ஆங்கிலம் பேச சொல்லி கொடுக்கும் வகுப்புகளுக்குச் சென்றேன். அத்தோடு நிற்காமல் தினசரி ஆங்கில நாளிதழ்கள் மற்றும் ஆங்கில நூல்களைப் படித்து ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் கற்றுக் கொண்டேன்.
அடிக்கடி நூலகம் சென்று புத்தகம் படிக்கும் பழக்கம் உண்டு. ஓர் நாள் நூலகத்தில் ரவீந்திரநாத் தாகூர் எழுதிய "கீதாஞ்சலி' என்ற நூலை படித்தேன். அப்போதுதான் எனக்குள் இருந்த எழுத்தார்வம் துளிர் விட்டது. அன்றுதான் நானும் ஓர் எழுத்தாளராக மாறவேண்டும் என முடிவு செய்தேன்.
இதையடுத்து ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்தேன். ஆங்கிலத்தில் கட்டுரைகளை எழுதினேன். என்னுடைய கட்டுரைகளை தொகுத்து Reflection of human Relations
 என்ற தலைப்பில் ஐதராபாத்தில் உள்ள ஓர் பதிப்பகம் மூலம் e-book ஆக வெளியிட்டேன்.
இந்த e-book ஐ கலிபோர்னியாவில் ஓர் கணிப்பொறி நிறுவனத்தில் பணிபுரியும் எனது நண்பரான ரஞ்சித்குமார் வாசித்துவிட்டு பல்வேறு இணைய தளங்களில் வெளியிட்டார்.
இதில் குறிப்பாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அலுவலகத்தில் இருந்து என்னை, எனது நூலை வாழ்த்தி இமெயில் வந்திருந்ததை அறிந்தேன். இது எனது முயற்சிக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக கருதுகிறேன். 
இப்போது அமெரிக்காவிலுள்ள கல்லூரியில் என்னை பிஹெச்டி படிக்க அழைப்பும் விடுத்து இருக்கிறார்கள்'' என்கிறார் அருண்மொழி வர்மன். 
மனிதன் சாதிப்பதற்கு பணமோ, படிப்போ, குடும்பச்சூழலோ தடையாக இருக்க முடியாது. கடின உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் எதுவும் சாத்தியம் என்பதை நிரூபித்துள்ளார் இந்த தமிழக இளைஞர். 


-ராஜன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments