எம்.ஜி.ஆர். இல்லாமல் படப்பிடிப்பு நடத்திய இயக்குநர்
மாடர்ன் தியேட்டர்ஸ் "அலிபாபாவும் 40 திருடர்களும்'. இந்தப் படம் கேவா கலரில் எடுக்கப்பட்டது புதுமை என்றாலும் அப்புதுமையைச் செய்தவர் டபிள்யூ. ஆர். சுப்பாராவ் என்னும் கேமரா நிபுணர்.
மாடர்ன் தியேட்டர்ஸ் "அலிபாபாவும் 40 திருடர்களும்'. இந்தப் படம் கேவா கலரில் எடுக்கப்பட்டது புதுமை என்றாலும் அப்புதுமையைச் செய்தவர் டபிள்யூ. ஆர். சுப்பாராவ் என்னும் கேமரா நிபுணர். இந்தச் சமயத்தில் படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான டி. ஆர். சுந்தரம் செய்த ஒரு துணிச்சலான காரியத்தை இங்கே சொல்லியாக வேண்டும்.
அவரைப் பொருத்தவரையில், அதாவதுமாடர்ன்தியேட்டர்ஸ் ஸ்டுடியோவைப் பொருத்தவரையில் யாருக்காகவும், எதற்காகவும் காத்துக்கொண்டிருக்கும் பழக்கமே இல்லை. இதை ஏற்கெனவே "சுலோச்சனா' படத்தில் பி. யு. சின்னப்பாவுக்கு பதில் டி.ஆர்.சுந்தரமே இந்திரஜித் வேடமேற்று நடித்திருந்தார் அல்லவா? அப்படி ஒரு சம்பவம் "அலிபாபாவும் 40 திருடர்களும்' பட சமயத்திலும்
நடந்தது.
படம் எல்லாம் முடிந்துவிட்ட நிலையில் ஒரு பாட்டும், ஒரு சண்டைக் காட்சியும் மட்டும் பாக்கியிருந்தது. பாடல் காட்சியில் எம்.ஜி.ஆர்.-பானுமதி சேர்ந்து நடிக்க வேண்டும். சண்டைக்காட்சியில் எம்.ஜி.ஆர். மட்டும் தேவை. எம்.ஜி.ஆர். வந்தால்தான் படப்பிடிப்பு. நாள் குறித்தாயிற்று. கதாநாயகன் படப்பிடிப்புக்கு வரவில்லை. டி.ஆர். சுந்தரம் படப்பிடிப்பை ஒத்தி வைத்து விடுவார் என்று எல்லோரும் நம்பினார்கள். ஆனால் நடந்ததோ வேறு; எம்ஜிஆருக்கு பதிலாக ஒரு டூப் நடிகரைப் போட்டு பாட்டையும், சண்டைக்காட்சியையும் டி.ஆர். சுந்தரம் எடுத்து படத்தை முடித்து விட்டார். டூப் காட்சியில் நடித்தவர் மாடர்ன் தியேட்டர்ஸின் நிரந்தர நடிகர் "கரடி முத்து' என்பவர்.
Advertisement
இரண்டு மூன்று நாள்கள் கழித்து எம்.ஜி.ஆர். படப்பிடிப்புக்கு வந்தார். அவரிடம் டி. ஆர். சுந்தரம் ""படப்பிடிப்பு முடிந்து விட்டது. முடிந்த படத்தை ஒரு தடவை பார்த்து விட்டுப் போங்கள்'' என்றார்.
எம்.ஜி.ஆர். படத்தைப் பார்த்தார். டூப் நடிகர் எங்கே நடித்திருந்தார் என்றே தெரியவில்லை. அவ்வளவு கச்சிதமாக படம் எடுக்கப்பட்டிருந்தது. மனக்கசப்புடன்தான் எம்.ஜி.ஆர். அங்கிருந்து வெளி யேறினார்.
இதனால் மாடர்ன் தியேட்டர்ஸ்-க்கும் எம்.ஜி.ஆருக்கும் உள்ள தொடர்பு விடுபட்டுப் போயிற்று. (இதற்கு முன்னதாக "மந்திரி குமாரி', "சர்வாதிகாரி' ஆகிய மாடர்ன் தியேட்டர்ஸின் வெற்றிப்படங்களில் எம்.ஜி.ஆர். நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது).
-(ரா. வெங்கடசாமி எழுதிய "மாடர்ன் தியேட்டர்ஸ்' என்ற நூலில் இருந்து...)