எந்த வேடத்துக்கும் தயார்
ஆர். கே. சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் " வேட்டைநாய்'. இப்படத்தின் மூலம் ரசிகர்களின் பரவலான கவனத்துக்கு வந்திருக்கிறார் விஜித் சரவணன்.
ஆர். கே. சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் " வேட்டைநாய்'. இப்படத்தின் மூலம் ரசிகர்களின் பரவலான கவனத்துக்கு வந்திருக்கிறார் விஜித் சரவணன். வில்லன் ராம்கியின் கூடவே பயணிக்கும் கதாபாத்திரத்தில் ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பை தந்து கவனம் ஈர்க்கிறார். இது குறித்து அவர் பேசும் போது....
""சினிமாக்காரனுக்கு கிளிசரின் போடாமல் கண்ணீர் வழிகிற நிமிடங்கள் இருக்கே... அது ரொம்பவே துயரமானது. ஏனென்றால் அது உண்மையான கண்ணீரா... இல்லை வெறும்
நடிப்பா... என்கிற சந்தேகம் ஒரு விநாடி எல்லாருடைய மனதிலும் எட்டிப் பார்த்து விட்டுப் போகும். வாய்ப்புகள் என்னைத் தேடி வந்ததா... நான் தேடிப் போகவில்லையா... என்பதை இப்போது கணக்குப் போட்டு பார்க்க முடியாது. பெரும் கனவு, லட்சியம் என கோடம்பாக்கத்துக்கு ஓடோடி வந்த நாள்கள் நினைவில் நிழலாடுகின்றன. எல்லா இடங்களிலும் சின்ன சின்ன தோல்விகள். இது எனக்கு ஒன்பதாவது படம்.
சமூகச் சூழல்களின் துரத்தல் ஒரு புறம். சிதைந்து விடாத சினிமா கனவு ஒரு புறம். இந்த இரண்டுக்குமான போராட்டங்களை வார்த்தைகளில் சொல்லி விட முடியாது. அதை வாழ்ந்துப் பார்த்தால்தான் தெரியும். இத்தனை வருட போராட்டங்களுக்குப் பின் இப்போதுதான் இருக்கை கொடுத்திருக்கிறது காலம். இயக்குநர் சொன்னதை உள்வாங்கி எனது நடிப்பை வெளிப்படுத்தினேன். சினிமாவில் இயங்க வேண்டும் என்பதுதான் என் ஆவல். அதற்காக எனக்கு பொருந்துகிற எந்த கதாபாத்திரம் வந்தாலும், ஏற்றுக் கொள்வேன்'' என்றார்.