போர் நிறுத்தம்! காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்.. சென்செக்ஸ் 2,600 புள்ளிகள் உயர்வு!
ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் போர்நிறுத்த அறிவிப்பு எதிரொலியாக சென்செக்ஸ் 2,600 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகமாகி வருவதைப் பற்றி...
ஈரானுக்கு எதிரான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் போர் நிறுத்த அறிவிப்பு எதிரொலியாக, இந்திய பங்குச் சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
கடந்த 35 நாள்களுக்கும் மேலாக மேற்காசிய நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெற்று வந்த அமெரிக்கா - ஈரான் - இஸ்ரேல் இடையேயான மோதல் இரண்டு வாரங்களுக்கு நிறுத்தம் செய்யப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய நேரப்படி புதன்கிழமை காலை அறிவித்தார்.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் போர் நிறுத்த அறிவிப்பு இந்திய பங்குச்சந்தைகளில் காலையிலேயே எதிரொலித்தது. காலை 9.15 மணிக்கு வர்த்தகம் தொடங்கியது அனைத்துப் பங்குகளும் நல்ல லாபத்தை ஈட்டின.
Advertisement
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதுமே அதிரடியாக 2,600 புள்ளிகள் உயர்ந்தது. அதேபோன்று, தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும் அதிரடியாக 750 புள்ளிகள் உயர்ந்தது.
காலை 9.40 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 2,665 புள்ளிகள் உயர்ந்து 77,281.77 புள்ளிகளுடன், நிஃப்டி 783.75 புள்ளிகள் உயர்ந்து, தற்போது 23,907.40-ல் வர்த்தகமாகி வருகிறது.