முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

புரிந்து கொள்ளும் போது வாழ்க்கை மாறுகிறது!

"ஆண்மையும்  பெண்மையும் உருவங்கள் மட்டுமே இல்லை. அதில் அவ்வளவு உணர்வுகள் உண்டு.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:43 AM
பகிர்:


"ஆண்மையும் பெண்மையும் உருவங்கள் மட்டுமே இல்லை. அதில் அவ்வளவு உணர்வுகள் உண்டு. ஒருவருக்குள் ஒருவர் தொலையாமல், ஒருவருக்குள் ஒருவர் தேடாமல், அடைய வேண்டும் என்று நினைக்கிற போதுதான் அசிங்கமாகி விடுகிறோம். ஒருவரின் வலியை இன்னொருவர் புரிந்து கொள்ளும் போதுதான் வாழ்க்கை அழகாக மாறுகிறது. ஒரு விஷயத்தை இன்னொரு விஷயத்தில் தேடும் போதும், தொலைக்கும் போதும்தான் நாம மனுஷங்களா ஆகிறோம் என்பது நம்பிக்கை. பேச்சில் ஈர்க்கிறார் இயக்குநர் ஹரி உத்ரா. அடுத்தடுத்து விழிப்புணர்வு சினிமாக்களை எடுத்து வரும் படைப்பாளி. இப்போது வரும் படம் "வில் வித்த' .

கதை எந்த ஒட்டத்தில் பயணிக்கும்....

இன்றைய சினிமா மிகவும் துணிச்சலாக பேச வேண்டிய விஷயம் இது. என் படங்களுக்கு இதுவரை எந்த இமேஜூம் இல்லாததால், எங்கேயும் நின்று நிதானிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. அதனால்தான் ஒரு கை பார்ப்போம் என இறங்கி வந்து விட்டேன். ஏதோ ஒரு விதத்தில் எல்லோரும் ஏதோ ஒரு விஷயத்துக்கு பொறுப்பாகி விடுகிறோம். பெண்மை, கற்பு, ஒழுக்கம் போன்ற கலாசார மதிப்பீடுகள் எல்லாம் வேறு வேறு அர்த்தங்கள் பெற்று உருமாறி விட்டன.

இன்னும் சில காலங்களில் பண்பாடு, கலாசாரங்களில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்பது தெரியாமல் தவிக்கப் போகிறோம். பெண்கள் உடலளவில் பலவீனமானவர்கள் என்பதைத் தெரிந்துக் கொண்டு எத்தனை பிரச்னைகளை உருவாக்கி விடுகிறது சமூகம். இதனால் சொல்ல முடியாத தவிப்பில் இருக்கிறார்கள் பெண்கள். வறுமை, ஆதிக்க சக்திகளின் பண பலம் என நிறைய விஷயங்கள் இதன் பின்னணியில் உண்டு. இந்தியாவின் வல்லரசு கனவு... சந்திரனுக்கு விண்கலம் என பெருமைகளை பேசிக் கொண்டிருக்கிற நாம், இன்னொரு பக்கம் ரணங்களை உள்நோக்கி பார்ப்பதில்லை.

அப்படி ஒரு பார்வை இது முன் வைக்கும். பெண் கொடுமைகளுக்கு எதிரான தீர்க்கமான ஒரு அரசியல் பார்வையும் இருக்கிறது.

பேச வேண்டிய விஷயம்தான்... வேறு என்ன எதிர்பார்க்கலாம்...

தில்லியில் தன் நண்பனோடு கைகோர்த்துப் போன மருத்துவ பெண் அப்படி ஒரு மூர்க்கமான சூறையாடலுக்கு ஆளாவோம் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். தலைநகரில் நடந்த கொடூரம் தடம் தெரியாத குக்கிராமங்களிலும் நடந்துக் கொண்டுதான் இருக்கின்றன. அதைக் கண்டும் காணாமலும் நாம கடந்துக் கொண்டுதான் இருக்கிறோம். பெண்களைக் காட்டிலும் ஆண்களை மனதாலும், உடலாலும் வலிமையாய் படைத்தது யாரையும் பலாத்காரப்படுத்த இல்லை... பத்திரமாய் பாதுகாப்பதற்கு. சாகப்போகிற கடைசி நிமிஷத்துல கூட, மனசுக்கு பிடித்தவனின் மடியில தலை சாய்க்க நினைக்கிறவர்கள் பெண்கள். அவர்களுக்கான நம்பிக்கையை ஏற்படுத்தி தராத இந்த சமூகத்தின் மீதான அதிரடி பாய்ச்சலாக இருக்கும்.

இன்னும் பரிச்சயமான நடிகர்கள் இருந்தால், கதை எல்லோரையும் போய் சேர வசதியாக இருக்குமே...

இதில் இருப்பவர்களுக்கு என்ன குறைச்சல். பரமக்குடியை சேர்ந்த அருண் டேனியலுக்கு கதையில் பிரதான் இடம்.

கதாநாயகியாக ஆராத்யா. ஏற்கெனவே சில படங்களில் வந்து பரிச்சயமானவர். "கர்ணன்' புகழ் ஜானகி, சுரேஷ், குணசேகரன், வைஷ்ணவி, மற்றும் வில்லனாக எஸ். எம். டி. கருணாநிதி என நம்பிக்கைக்கு உரியவர்கள். டேனியலுக்கு சினிமா பற்றி நல்ல கனவுகள் உண்டு. சிறு வயதில் இருந்தே சினிமாவில் பயணிக்க ஆசைப்பட்டவர். அது குறித்தே யோசித்துக் கொண்டிருப்பவர். அந்த அர்ப்பணிப்புக்கு ஒரு முதல் தகுதியை உண்டாக்கி தரும் விதமாக இந்தப் படம் இருக்கும். இணை தயாரிப்பாளராகவும் கை கொடுத்திருக்கிறார். கதாநாயகி ஆராத் யா பார்த்த முகம்தான். இந்தப் படம் அவரை பரிச்சயமான முகமாக மாற்றி விடும். தொழில்நுட்ப கலைஞர்களுக்கு அதி முக்கியத்துவம் உள்ள இடங்கள் உண்டு. இசை, ஒளிப்பதிவு, பாடல்கள் என எல்லாவற்றிலும் புதுமை வந்து சேர்ந்திருக்கிறது. நெடுநாள் கனவு இந்தப் படம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.