தேர்தல் விதி மீறியதாக வேலூர் மேயர் சுஜாதாவின் கார் பறிமுதல்!
தேர்தல் விதிகளை மீறியதாக வேலூர் மேயர் சுஜாதாவின் கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
காரை சோதனை செய்ய விடாமல் தடுத்த விவகாரத்தில் வேலூர் மேயர் சுஜாதாவின் ஓட்டுனர் மீது இரு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுளள்து. விரைவில் மேயர் மீதும் வழக்குப்பதிய வாய்ப்பு உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர், சத்துவாச்சாரியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் பின்புறம் தேர்தல் விதி மீறி வேலூர் திமுக மேயர் சுஜாதா விளையாட்டு உபகரணங்களை கொடுக்க முயற்சித்ததாக அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்ஆர்கே அப்பு குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.
அந்த வேளையில், தேர்தல் பணியில் இருந்த தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனையிட முயற்சித்த போது காரில் இருந்தவர் தன்னை மேயர் என்று அடையாளப்படுத்திக் கொண்டு காரை நிறுத்தாமல் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தேர்தல் நிலை கண்காணிப்பு குழு சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் மேயரின் கார் ஓட்டுநர் மீது அரசு அலுவலரை பணி செய்ய விடாமல் தடுத்தல் மற்றும் தேர்தல் விதி மீறி பரிசு பொருள்கள் விநியோகிப்பது உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் நேற்று மேயர் பயணித்த காரை சத்துவாச்சாரி காவல்துறையினர் இன்று பறிமுதல் செய்துள்ளனர்.
கார் ஓட்டுனர் மீது முதற்கட்டமாக வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில் மேயர் சுஜாதா மீதும் வழக்குப்பதிய வாய்ப்புள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.