முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

தங்க மங்கையின் புதிய வரலாறு

தடகள வீராங்கனையில் இருந்து இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டு வரலாறு படைத்துள்ளார்  தங்க மங்கை பி.டி. உஷா.

Updated On : 3 டிசம்பர், 2022 at 8:38 PM
பகிர்:

தடகள வீராங்கனையில் இருந்து இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டு வரலாறு படைத்துள்ளார் தங்க மங்கை பி.டி. உஷா.

கிரிக்கெட் தவிர அனைத்து விளையாட்டுகளையும் தன்னுள் கொண்டுள்ளது சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பு (ஐஓசி). சுவிட்சர்லாந்தின் லாúஸனில் தலைமையகத்தைக் கொண்டுள்ள இந்த அமைப்பே உலக விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகளை நடத்துகிறது.

குழு விளையாட்டுக்கள் இருந்தாலும், தனி நபர் திறமையை வெளிப்படுத்தும் தடகளத்துக்கு எப்போதும் தனி மதிப்புள்ளது. தடகளத்தில் ஒலிம்பிக் சாம்பியன், உலக சாம்பியன் பட்டங்கள் வெல்வது மிகவும் பெருமை தருவதாகும்.

Advertisement

பயோலி எக்ஸ்பிரஸ் உஷா: கேரள மாநிலத்துக்கு உள்பட்ட கோழிக்கோடு மாவட்டம் குட்டாலியில் 1964-இல் எளிய குடும்பத்தில் பிறந்தார் பிளவுள்ளகண்டி தெக்கபறம்பில் உஷா எனப்படும் பி.டி. உஷா. சிறுவயது முதலே தடகளத்தில் ஈடுபாடு கொண்ட அவர், 1976-இல் கண்ணூரில் மகளிர் விளையாட்டுப் பிரிவு தொடங்கப்பட்ட நிலையில், ஓ.எம். நம்பியாரிடம் பயிற்சி பெறத் தொடங்கினார். சிறந்த முயற்சியால் 1978-இல் இன்டர் ஸ்டேட் போட்டியில் 6 பதக்கங்களை தன்வசப்படுத்தினார்.

கேரள கல்லூரி போட்டியில் 14 பதக்கங்களைக் கைப்பற்றிய நிலையில், தேசிய பள்ளிகள் விளையாட்டில் தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றார். அவருக்கு "பயோலி எக்ஸ்பிரஸ்' என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

சர்வதேச பதக்கங்கள்:

தேசிய அளவில் முத்திரை பதித்த உஷா, பின்னர் பாகிஸ்தானில் நடைபெற்ற பாகிஸ்தான் ஓபன் தடகளப் பந்தயத்தில் 4 தங்கம் வென்றார். மாஸ்கோவில் 1980 ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற "மிகவும் ஸ்பிரிண்டர்' என்ற சிறப்பைப் பெற்றார். 1982 தில்லி ஆசியப் போட்டியில் 2 வெள்ளியும், தென்கொரியாவில் நடந்த உலக ஜூனியர் போட்டியில் தங்கம், வெண்கலமும் வென்றார். பின்னர் தெற்கு ரயில்வேயில் சிறப்பு விளையாட்டு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

ஒலிம்பிக் திருப்புமுனை: லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் 1984 ஒலிம்பிக் போட்டியில் 400 மீ. ஹர்டில்ஸில் நூலிழையில் வெண்கலப் பதக்கத்தை தவற விட்டார் உஷா. அது அவரது வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. அதன்பின்னர் பல்வேறு ஆசிய, தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் உள்பட பல்வேறு பதக்கங்களை கைப்பற்றிய பி.டி.உஷா இந்திய தடகள ராணி ஆனார்.

2000-இல் ஓய்வு பெற்றார். இதன் தொடர்ச்சியாக 2002-இல் உஷா தடகள பயிற்சி மையத்தைத் தொடங்கி, சிறுவர், சிறுமியருக்கு பயிற்சி அளித்து வருகிறார். தெற்கு ரயில்வேயில் சீனியர் உதவி பொதுப் மேலாளராகப் பதவி உயர்வு பெற்றார். அண்மையில் மாநிலங்களவை உறுப்பினராகவும் மத்திய அரசால் நியமிக்கப்பட்டார்.

அர்ஜுனா, பத்மஸ்ரீ விருதுகளைப் பெற்ற உஷா, 2 முறை உலகின் சிறந்த தடகள வீராங்கனை விருதையும் பெற்றார். "தங்க ஷூ' விருதும் அவர் வசமானது.

ஐஓஏ தலைவராக தேர்வு: இந்திய தடகளத்தில் பி.டி. உஷாவின் அரிய சேவையின் தொடர்ச்சியாக தற்போது நாட்டின் உயரிய விளையாட்டு அமைப்பான இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார் . மேலும் ஐஓஏவின் முதல் பெண் தலைவர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

பல முறை கடும் பின்னடவைச் சந்தித்தாலும், 101 சர்வதேச பதக்கங்களை வென்று சாதனைகளை புரிந்துள்ளார்.

ஒரே தடகள பந்தயத்தில் அதிக தங்கம் வென்ற வீராங்கனை என்ற உலக சாதனை அவர் வசம் உள்ளது. 1985-இல் நடைபெற்ற ஜகார்த்தா ஆசிய பீல்ட், டிராக் போட்டியில் 5 தங்கங்களை வென்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.