முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

இணையத்தில் புத்தகப் பொங்கல்!

தமிழகத்தில் புகழ்பெற்ற புத்தகக் கண்காட்சிகளில் முதலிடத்தில் இருப்பது சென்னை பபாசியின் புத்தகம் கண்காட்சி இந்தப் புத்தகக் கண்காட்சியை காண பல்வேறு மாவட்டம், மாநிலம், வெளிநாடு ஆகிய பகுதிகளில் உள்ள

Updated On : 23 ஜனவரி, 2022 at 6:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:42 PM

தமிழகத்தில் புகழ்பெற்ற புத்தகக் கண்காட்சிகளில் முதலிடத்தில் இருப்பது சென்னை பபாசியின் புத்தகம் கண்காட்சி இந்தப் புத்தகக் கண்காட்சியை காண பல்வேறு மாவட்டம், மாநிலம், வெளிநாடு ஆகிய பகுதிகளில் உள்ள புத்தக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், குழந்தைகள், மாணவர்கள் என்று ஒரு
திரளான கூட்டம் ஒன்று சேர்வார்கள்.

ஆனால் இந்த ஆண்டு ஜனவரி 6-ஆம் தேதி தொடங்க வேண்டிய கண்காட்சி கடைசி நேரத்தில் கரோனா நோய்த் தொற்று காரணமாக தள்ளிப் போனது. ஆனால் இப்போது இருக்கும் நவீன உலகத்தில் புத்தகங்களை எப்படி அறிமுகம் செய்யலாம் விற்பனை செய்யலாம் என்று நினைத்த பாரதி புத்தகாலயம், உழவர் தினத்தன்று (16-1-2022) புத்தகப் பொங்கல் என்ற தலைப்பில் இணைய நேரலை வழியாக "புத்தக அறிமுகம்- கொண்டாட்டம்' என்ற நிகழ்ச்சியை காலை 10மணி முதல் இரவு 10மணி வரை தொடர்ந்து ஒரு வரலாற்று நிகழ்வாக நடத்தினர் . இதில் எழுத்தாளர்கள் பலர் பேசினர்.

ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். பேசியது: ""அதிகமானோர் புத்தகங்களை எனக்கு அனுப்பி வைக்கின்றனர். ஆனால் என்னால் வாசிப்புக்கு அதிகமான நேரம் ஒதுக்க முடியாது. முக்கிய காரணம் என்னவெனில் அலுவலக நேரத்தை தாண்டி, என்னுடைய தொல்பொருள் ஆராய்ச்சி சம்பந்தமான ஆய்வு புத்தகங்களை தொடர்ந்து படிப்பதால் மற்ற புத்தகங்களுக்கு நேரத்தை செலவு செய்ய முடியவில்லை. இருந்தாலும் கிடைக்கிற நேரங்களில் சில புத்தகங்களை தேர்வு செய்து படிக்கிறேன். கரோனா நோய்த் தொற்று நம்மைபப்பற்றி நாமே யோசிக்க, சிந்திப்பதற்கு கொடுத்த வாய்ப்பு. குறிப்பாக வாழ்க்கையின் எல்லைகளை சொல்லிக் கொடுத்தது. அந்த வகையில் இலக்கிய, பொருளாதார நூல்களை விட நான் பேசியே தீர வேண்டும் என்று கையில் எடுத்த மொழிப்பெயர்ப்பு நூலான 1232.கி.மீ வினோத் காபிரி எழுதிய இந்நூலை தமிழில் மொழிப்பெயர்த்தவர் நாகலெட்சுமி சண்முகம் என்பவர்.

Advertisement

இந்நூல் கரோனா ஊரடங்கில் டெல்லியின் அருகாமையில் இருந்து, பீகாரைச் சேர்ந்த 7தொழிலாளர்கள் கோடை வெயிலும் பாராமல் 7பகல், 7இரவுகள் புலம்பெயர்ந்த பயணத்தை தானும் கூடவே சென்று இயக்குநர் வினோத் காப்ரி என்பவர் ஆவணப்படுத்துகிறார். இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு தேசிய விருது பெற்றவர் . அதைப்போல் 2017-ஆம் ஆண்டிலும் ஒரு படத்திற்காக விருதுபெற்றுள்ளார். ஒரு ஊடகவியலாளராகவும் இருக்கிறார்.

இந்த புத்தகம் என்னை எதற்காக படிக்க வைத்தது என்றால் அதே காலகட்டத்தில் பல வகையில் ஒடிஷாவில் அலுவல் சார்ந்து, முதல்வரின் தலைமை ஆலோசகர் என்ற முறையில் நானும், அதிகாரிளோடு இணைந்து இந்த மாதிரியான பிரச்னைகளைத்தான் கையாண்டு கொண்டே இருந்தோம். கவனித்துக் கொண்டே இருந்தோம்;. ஏனென்றால் இந்தியாவில் அதிகம் புலம்பெயர்ந்து வேலை செய்யும் தொழிலாளிகள் அதிகமாக உள்ள மாநிலம் என்று பார்த்தால் பீகார், ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம், ஒடிஷா, அசாம் போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இருப்பார்கள்.

ஆகவே ஒடிஷாவில் இருந்து சென்று பல இடங்களில் பணியாற்றுகிற குறிப்பாக, குஜராத், மகாராஷ்டிரா, சென்னை, பெங்களுர், ஹைதராபாத், கேரளா மற்றும் பல இடங்களில் ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் லட்சக்கணக்கானோர் பணியாற்றுகின்றனர். அவர்கள் எப்படி கரோனா ஊரடங்கில் திரும்பி வருவார்கள், வந்தால் எப்படி கவனிப்பது, நோய்த் தொற்று ஏற்படாமல் எப்படி பார்த்துக் கொள்வது என்ற கவலையில் பணிபுரிந்து கொண்டிருந்த நேரத்தில் எதை கண்கூடாக பார்த்தோமோ அது இந்த புத்தகத்தில் இருக்கிறது என்று கூட சொல்லலாம்'' என்றார்.

"ஒரு நல்ல வறட்சியை எல்லோரும் நேசிக்கிறார்கள்' என்ற புத்தகத்தை கடந்த 1993-ஆம் ஆண்டு முதல் 1995-ஆம் ஆண்டு வரை 80 ஆயிரம் கி.மீ. பயணங்கள் மேற்கொண்டு கள ஆய்வு செய்து இந்த புத்தகத்தை 1996-ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். பி.சாய்நாத்.

ஆனால் சென்ற ஆண்டு ஆர்.செம்மலர் என்பவரால் தமிழில் மொழிப் பெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது. மாவட்டங்கள் இவ்வளவு பின் தங்கி இருக்கிறது என்பதை பாராளுமன்றத்திலும் பேச வைத்தது இந்நூல். இவ்வளவு ஆண்டுகள் கழித்தும் அந்த புத்தகம் பேசப்படுகிறது என்றால் அதில் இடம்பெற்ற சிறப்பான கட்டுரைகள் தான் என்று கூட சொல்லலாம். புதுக்கோட்டை மாவட்டம் கல்வியறிவு சதவீதத்தில் பின் தங்கியிருந்த காலத்தில் அறிவொளி இயக்கம் மிகச்சிறப்பாக செயல்பட்டு கல்வியறிவு சதவீதத்தை அதிகரிப்பதற்கு பாடுப்பட்டதையும் இந்நூலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன'' என்றார் எழுத்தாளர் கவிதா முரளிதரன்.

"இலக்கணம் இனிது' , "தொல்குடித் தழும்புகள்', "வைக்கம் போராட்டம்', "சிற்றிலக்கியச் சீர்', "மண்டியிடுங்கள் தந்தையே' போன்ற பல புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.