ஆட்டம்... பாட்டம்... கொண்டாட்டம்...
சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிஃபா) நடத்தும் 22-ஆவது உலகக் கோப்பை கால்பந்து தொடர் (2022) நவ. 20-இல் கத்தாரில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் கோலாகலமாகத் தொடங்குகிறது.
சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிஃபா) நடத்தும் 22-ஆவது உலகக் கோப்பை கால்பந்து தொடர் (2022) நவ. 20-இல் கத்தாரில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் கோலாகலமாகத் தொடங்குகிறது.
ஒலிம்பிக் போட்டி, கிரிக்கெட் போட்டிகளுக்கு நிகராக, கோடிக்கணக்கான ரசிகர்கள் ரசிக்கும் இந்தப் போட்டியை நடத்த கத்தார் நாடு முழு வீச்சில் தயாராகி உள்ளது.
வரலாற்றில் முதன் முறையாக மத்திய கிழக்கு நாடான கத்தார் உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவை நடத்துவதால், பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது இந்தப் போட்டி.
டிசம்பர் 18-ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த கால்பந்து திருவிழாவில் 32 அணிகள் கலந்து கொண்டு பட்டத்துக்கு மோதுகின்றன. சாம்பியன் பட்டம் வெல்வது யார்? என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி டிச. 18-இல் லுஸையில் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இதன் தொடக்க ஆட்டம் நவ. 20-ஆம் தேதி 60 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் கட்டப்பட்டுள்ள அல் பயத் மைதானத்தில் நடைபெறுகிறது.
இதன்தொடக்க விழாவில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. கொலம்பிய பாப் பாடகி ஷகிரா, பிரிட்டன் பாடகி துவா லிபா, பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹி உள்ளிட்டோர் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்களை மகிழ்விக்க உள்ளனர்.
இந்தப் போட்டிகளுக்காக 30 லட்சம் டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் இருந்து சுமார் 12 லட்சம் ரசிகர்கள் போட்டியைக் காண்பதற்கு கத்தாருக்கு வந்து குவியலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. பல கோடி ரசிகர்கள் தொலைக்காட்சிகளில் ரசிப்பர். பார்வையாளர்களை உற்சாகப்படுத்துவதற்காக 90 வகையான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கும் கத்தார் அரசு ஏற்பாடு செய்துள்ளது. குளிர்காலத்தில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதன் மூலம் குளிர்காலத்தில் நடத்தப்படும் முதல் உலகக் கோப்பை என்ற பெருமையை இந்தத் தொடர் பெற்றுள்ளது.
28 லட்சம் மக்கள் தொகையை மட்டுமே கொண்டகத்தார், உலகக்கோப்பை கால்பந்து தொடருக்காக 220 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் 8 கால்பந்து மைதானங்கள், விமான நிலைய விரிவாக்கம், மெட்ரோ ரயில், நெடுஞ்சாலை, நட்சத்திர விடுதிகள் என கடந்த 10 ஆண்டுகளில் அனைத்து நாடுகளும் ஆச்சரியப்படும் அளவிற்கு ஏற்பாடுகளை செய்துள்ளது.
போட்டிகளையொட்டி, சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் ஏராளாமான வசதிகளை கத்தார் நாடு ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் தோஹாவைச் சுற்றி எட்டு கால்பந்து மைதானங்கள் இந்த கால்பந்து திருவிழாவுக்காக தயார்படுத்தப்பட்டுள்ளன. புத்தம்புதிதாக கட்டப்பட்டுள்ள இந்த ஸ்டேடியங்கள் நட்சத்திர விடுதிகளை மிஞ்சும் அளவுக்கு பிரமிப்பாகவும் வசதிகள் கொண்டதாகவும் உள்ளன.
உலகம் முழுவதிலும் இருந்து கால்பந்து ரசிகர்கள் கத்தார் நாட்டுக்கு வந்து குவியத் தொடங்கியுள்ளனர். விடுதிகள் அனைத்தும் சில வாரங்களுக்கு முன்னரே பதிவாகிவிட்டன.
இந்நிலையில், பல ரசிகர்கள் ஆற்றங்கரையில் கூடாரம் அமைத்து தங்கத் தொடங்கியுள்ளனர். மேலும் நிலைமையை சமாளிக்க அந்நாட்டு அரசு தற்காலிக விடுதிகள் கட்டி, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை தங்கச் செய்து நிலைமையை சமாளித்து வருகிறது.
சொகுசு கப்பலில் தங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் துவங்கியுள்ளது.தோஹா முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது கத்தார் நாட்டுக்கு பாண்டா ஜோடியை பரிசளித்த சீனா: கத்தார் நாட்டிற்கு சீனா ஒரு ஜோடி பாண்டாவை பரிசளித்துள்ளது. இம்முறை உலகக் கோப்பை கால்பந்து போட்டி தொடருக்கு சீனா தகுதி பெறவில்லை. இருந்தபோதும் கத்தார் நாட்டுடனான தனது நட்புறவை வெளிப்படுத்தும் விதமாக சீனா இந்த அன்பளிப்பை அனுப்பி வைத்துள்ளது. இதன் மூலம் மத்திய - கிழக்கு நாடுகளுக்கு பாண்டாக்கள் வருகை தந்திருப்பது இதுவே முதல் முறை.